Skip to main content

"எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க" - ஹர்பஜன் சிங் வேதனை...

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

harbhajan singh about sathankulam issue

 

சாத்தான்குளத்தில் போலீஸார் பிடியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் வேதனை தெரிவித்துள்ளார். 

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். 

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணத்திற்கு, அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம். வலிப்பவருக்குத் தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.