Skip to main content

“நான் ஏன் கவிதையைக் கைவிட்டேன்?” - எழுத்தாளர் சோ.தருமன் நேர்காணல்

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
writer cho dharman interview

 

சோ.தருமன்-

 

தனது அப்பட்டமான அதிரடி எழுத்துகளால் தமிழிலக்கியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். விவசாயம் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த இவர் கரிசல் இலக்கியத்தின் மூலம் தனது தனித் துவமான படைப்புகளால் எழுந்து நிற்கிறார். இவரது சிறுகதைகளும், புதினங்களும் அடித்தட்டு மக்களுக்காக, அவர்களையே பேசுகின்றன. சமூகநீதிக்கான குரலாக, ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்கான வாதடலாக இவரது எழுத்துகள் இயங்கிவருவது பெருமைக்குரியது. பல்வேறு விருதுகளால் சிறப்பிக்கப்பட்ட தருமனின் ’சூல்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோரின் திருப்புதல்வராக தூத்துக்குடி மாவட்டம் உருளைகுடி எனும் சிற்றூரில் 1953 ஆகஸ்ட் 8-ல் பிறந்த தருமன், இலக்கோடும் பொறுப் புணர்வோடும் எழுதிவருகிறார். அதனால் அவர் எழுத்துக்களில் மனிதம் நிரம்பிவழிகிறது. அவரை நம் இனிய உதயத்துக்காக சந்தித்தபோது...

 

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீங்கள், எப்படி இலக்கிய விவசாயியாக மாறினீர்கள்?

 

நல்ல கேள்வி. நான் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். எங்கள் கிராமமே விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். நான் இப்போதும் ஒரு விவசாயிதான். எங்கள் குடும்பத்தின் வேர் என்றால் அது விவசாயம் தான். எங்களுடைய பாட்டன், தாத்தா, அப்பா, நான் என எல்லோருக்குமே ஆதாரமாக இருந்ததும், இருப்பதும், அதுதான். எனக்கும் 10 ஏக்கர் கரிசல் காடு உள்ளது. அந்ததக் காலத்தில் கிராமங்களில் எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்காது. அப்போது நாட்டுப்புறக் கூத்துக்கள் மட்டும்தான் இருந்துச்சு. நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊர்களில் ஏதேனும் கூத்து என்று கேள்விப்பட்டால், எங்கள் கிராம மக்கள் அதைப் பார்க்கக் கிளம்பிப் போய் விடுவார்கள். கூத்து பார்த்து விட்டு நடுச்சாமத்தில்தான் எங்கள் கிராமத்திற்கு திரும்புவார்கள். இதில் எங்க அய்யாவும் ஒரு நாட்டுப்புற கலைஞர் என்பதால், அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு எனக்கு என் 13 வயசு வரை கிடைச்சிது. .

 

அதுக்குப் பிறகு எனக்கு மனசில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புறதுக்குதான் நான் வாசிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்தைக் கட் அடிச்சிட்டு நான் லைப்ரரிக்குப் போய்டுவேன். இப்படித்தான் வாசிக்கும் பழக்கம் வந்துது. என் தாய்மாமாவான எழுத்தாளர் பூமணியின் வீட்டுக்கு அதிகமா போவேன்.

 

அங்கு நிறைய புத்தகங்கள் இருக்கும். நான் பார்காத, தெரிந்திடாத புத்தகங்களெல்லாம் அங்கு இருக்கும். அதை எல்லாம் எடுத்து வந்து வாசிப்பேன். அந்தப் புத்தகங்கள்தான் என்னை செதுக்குச்சு. அந்த தீராத வாசிப்புதான் என்னை எழுத்துத் துறைக்கு கொண்டு வந்துச்சு.

 

எனக்கு கிடைச்ச வாய்ப்புகளை நான் நல்லா பயன்படுத்திக் கிட்டேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த விவசாயியான நானும், எழுத்து விவசாயி ஆகிவிட்டேன்.

 

உங்கள் தந்தையார் நாட்டுப் புறக் கூத்தில் நடிப்பார் என்று சொன்னீர்களே?

 

ஆமாம். என் தந்தை பிரபலமான கூத்துக் கலைஞர். கும்மிக்கூத்துக் கலைஞரா அவர் இருந்தார். ராமாயணக் கூத்தெல்லாம் அப்ப நிறைய நடக்கும். எங்க அய்யாதான் அதில் ஹீரோ. ராமர் வேசம் கட்டி ஆடுவார். அப்ப ராமர், சீதை, லட்சுமணன், மாரீசன், பரசுராமன் வேசமெல்லாம் கட்டிக்கிட்டு கூத்துக் கலைஞர்கள் எல்லோரும் ஆடிப் பாடி நடிப்பாங்க. அதை எல்லாம் ரசிச்சிப் பார்ப்பேன். ஒரு கட்டத்தோடு, இதெல்லாம் முடிஞ்சிப்போயிடுச்சி. அதுல எனக்குப் பெரும் வருத்தம். ஆனாலும் நான் வாசிக்கும் பழக்கத்தால் எழுத்தாளர் ஆயிட்டேன். என் மாமா பூமணி எழுத்தாளராக இருந்ததும், எங்களுக்கு அருகிலேயே கி.ரா இருந்ததும், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். சிறுகதைகள் எழுதுவதற்கு முன் நான் கவிஞனாகவும் இருந்தவன். கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எனது கவிதைகள் வந்துள்ளன.

 

கவிதையை எதற்காகக் கைவிட்டீர்கள்?

 

கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம் என்று தோன்றியதால், . கவிதைகளை விட்டுவிட்டு, சிறுகதைகள் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். உரைநடைக்குள் போனதால் எனக்கு விசாலமான இடம் கிடைத்தது. மதுரையிலிருந்து வெளியான ""மகாநதி"" எனும் பத்திரிகையை கவிஞர் பரிணாமன் மற்றும் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த தி.சு. நடராஜன் இருவரும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக கவிஞர் பரிணாமன் இருந்தார். என் முதல் சிறுகதை 1980 ஆம் ஆண்டில் நான் எழுதிய சிறுகதையான ’விறுவு’ மகாநதியில் வெளியானது. அதன் பின் நான் கவிதை எழுத விரும்பவில்லை. சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

 

நேர்காணல் : வீரசோழன் க.சோ.திருமாவளவன்

 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...