Skip to main content

பெரியாரின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர்... பின் காங்கிரசில் இணைந்தவர்...  

Published on 23/02/2018 | Edited on 23/02/2018

பிப்ரவரி 23 – சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் மறைந்த நாள் 

ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
 

EVK Sampath


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார். குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.

தமிழ்செய்தி, ஜெயபேரிகை என்கிற தினசரி செய்தித்தாள்களையும், அலைகள் என்கிற பெயரில் வார இதழையும் நடத்திவந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பத்திரிகை செலவு, கட்சி செலவுகளால் பெரும் நட்டத்துக்கு உள்ளானதால் பிற்காலத்தில் அவைகளை நிறுத்தினார். மேடை பேச்சுகளில் தமிழ் வார்த்தைகள் அருவியாய் கொட்டும். அதன்பொருட்டே அவரை சொல்லின் செல்வர் என அழைத்தனர்.

பெரியார் – மணியம்மை திருமணம் சம்பத் தான் பெரியாரின் வாரிசு என்கிற கருத்தை நொறுக்கிவிட்டது. இயக்கத்தின் பெரும்பான்மை தளபதிகள் பெரியாரின் முடிவால் இயக்கத்தில் இருந்து விலகினர். பெரியாரின் மூத்த தளபதியான அண்ணாவின் பின்னால் பெரியாரின் வாரிசு என நம்பப்பட்ட சம்பத் உட்பட அனைவரும் சென்றனர்.
 

Kamaraj ECKS MGR


 

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. பெரியாருக்கு அடுத்த இடத்தில் சம்பத் இருந்தார். படித்தவர், அனுபவசாலி, சிந்தனையாளர், சட்டதிட்டங்கள் வடிவமைப்பதில் வல்லவர், இளைஞர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் மிக்கவர். 1957ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாகி டெல்லி சென்றார். டெல்லி அவரது கொள்கையை மட்டுமல்ல அவரையே மாற்றியது. திராவிட நாடு கொள்கையை தீவிரமாக ஆதரித்துப் பேசிய சம்பத், படிப்படியாக அதை பேசுவதை தவிர்த்தார். இதனை அறிந்த திமுக தலைவர்கள் திமுகவை விட்டு விலகுகிறார் என்பதை அறிந்தனர்.

 

EVKS Ilangovan
 

அதோடு, கட்சியில் சம்பத் – கருணாநிதி ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாகின. அந்த குழு மோதலால் கருணாநிதியை நசுக்க எவ்வளவோ முயன்றார் சம்பத், அதில் தோல்விகளை சந்தித்தார். இதனால் திமுகவில் நடிகர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, தன்னை மதிக்கவில்லை என குற்றச்சாட்டுகளை கூறிவிட்டு அண்ணாவுடன் சண்டை போட்டுக்கொண்டு திமுகவில் இருந்து  விலகுவதாக 1961 ஏப்ரல் 9ந்தேதி சம்பத்  அறிவித்தார். உடனடியாக தமிழ் தேசிய கட்சி என்கிற கட்சியை தொடங்கி நடத்தினார். அதற்கு பெரியார், பாரதிதாசன் போன்றோர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் தனிக்கட்சி சரியாக வராது என காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார், தோல்வி தான் கிடைத்தது.

 

Iniyan Sampath
 

இவரது மனைவி சுலோசனாசம்பத். இவர்களுக்கு 1946ல் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இளங்கோவன், இனியன் என இரண்டு பிள்ளைகள். அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் நீண்டகாலம் இருந்தவர் சுலோசனாசம்பத். அவர்களது மகன்களில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர், அதிரடி கருத்தாளர், மத்திய இணையமைச்சர் பதவி வகித்தவர். இனியன் சம்பத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளில் இருந்தவர் பின்னர் பழ.நெடுமாறன் கட்சியில் இருந்தார், பின்னர் தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்துகிறார்.

 

தனது 51வது வயதில் அதாவது 23.2.1977ல் மறைந்தார் ஈ.வி.கே.சம்பத்.

 

 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.