Skip to main content

ஒடிஸ்ஸா தாரா தாரணி மந்திர் ஆலயம்!

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

 odisha tara tarini temple

 

தாரா தாரணி மந்திர்... இந்த ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. பிரம்மபூர் கஞ்ஜாம் என்னும் ஊரிலிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில், ரிஷிகுல்யா நதியின் கரையில் அமைந்துள்ளது. மலையின்மீதுள்ள இந்த கோவில், ஒடிஸ்ஸாவின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இந்தியாவிலிருக்கும் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று என்று புராண நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. அன்னை சதிதேவியின் மார்புப் பகுதி விழுந்த இடத்தில், இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

அங்கு தாரா, தாரணி என்னும் இரு உருவங்களில் அன்னை காட்சியளிக்கிறாள். இந்தியாவின் நான்கு தந்திர பீடங்களில் ஒன்று இது. மற்ற மூன்று தந்திர பீடங்கள்: காமாக்யா (அஸ்ஸாமில் உள்ள இந்த ஆலயம் இருக்கும் இடத்தில் சக்தியின் யோனி விழுந்தது). கொல்கத்தாவிலிலிருக்கும் தட்சிணகாளி ஆலயம் (சக்தியின் முகம் விழுந்திருக்கிறது). ஒடிஸ்ஸாவின் ஜகந்நாதர் ஆலயத்திற்குள் இருக்கும் பிமலா. (அங்கு சக்தியின் கால் விழுந்ததாக வரலாறு).

 

சக்தியை வழிபடுபவர்களுக்கு இந்த ஆலயம் மிகவும் முக்கியமானது. சிவபுராணம், கலிங்கபுராணம் ஆகியவற்றில் இவ்வாலயம் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இங்கு சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். சித்திரை மாதச் செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 1.00 மணியிலிலிருந்து மறுநாள் இரவு 11.00 மணிவரை இந்த ஆலயத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. குழந்தைகளின் தலைமுடியைக் காணிக்கை அளிப்பதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அணி அணியாக வருகின்றனர். இங்கு தலைமுடியைக் காணிக்கையளித்தால், குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள்; பிறரின் கண் திருஷ்டியிலிலிருந்து விடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. நவராத்திரிக் காலத்தில் தாரா, தாரணி ஆலயத்தில் மிகப்பெரிய கூட்டம் இருக்கும். தசரா, தீபாவளி, சங்கராந்தி போன்ற சமயங்களிலும் திரளான பக்தர்கள் கூடுவார்கள்.

 

கலிங்க மன்னர்கள் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள் என்பது வரலாறு. பாசுப்ரஹராஜ் என்ற 17-ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த மன்னன் பிற்காலத்தில் இவ்வாலயத்தைப் புதுப்பித்துக் கட்டியுள்ளான். இப்போது தாரா, தாரணி வளர்ச்சி மையம் என்ற அமைப்பு இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்கிறது. சென்னையிலிலிருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து ரயில்கள் மூலமாகவும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம். புவனேஸ்வர் அல்லது கட்டாக்கில் இறங்கவேண்டும். கட்டாக்கிலிருந்து 155 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. விமானத்தில் செல்பவர்கள் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். அங்கிருந்து 188 கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது.

 

இந்த கோவிலுக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. துவாபர யுகத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக கிருஷ்ணரும் அர்ஜுனரும் பத்ரகாளியை வேண்டினர். அவர்கள் வழிபட்டது, இப்போது இந்த ஆலயம் இருக்கும் இடம். கி.மு. 250-ல் நடைபெற்ற கலிங்கப் போரில், மாமன்ன அசோகனிடம், கலிங்க மன்னர்கள் தோல்வியடைந்து விட்டனர். வெற்றியடைந்தாலும், போரில் குருதி வெள்ளத்தைப் பார்த்து மனவேதனையடைந்த மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவினார். புத்தமதக் கருத்துகளை அனைத்து இடங்களிலும் பரப்பினார்.

 

அந்த காலகட்டத்தில் கலிங்க மன்னர்கள் இவ்வாலயத்தைக் கட்டி, தெய்வங்களை உருவாக்கியிருக்கின்றனர். தாரா என்ற அன்னையை பொன்னிலும், தாரணி என்ற அன்னையை வெள்ளியிலும் உருவாக்கினர். இருவரின் தலைகளும் செம்பால் செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல உடல்நலத்துடன் இருக்க நினைப்பவர்கள், தங்களின் முயற்சிகளில் வெற்றி பெற ஆசைப்படுபவர்கள், வாழ்க்கையில் சாதிக்க எண்ணுபவர்கள், தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கக் கருதுபவர்கள் அனைவரும் தாரா, தாரணி மந்திரைத் தேடிவருகிறார்கள். இரு அன்னைகளையும் வழிபட்டுப் பயன்பெறுகிறார்கள்.