Skip to main content

தினம்தோறும் பணப்புழக்கம் வேண்டுமா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

கோடீஸ்வரர்களாகப் பிரகாசிக்க நிச்சயமாக கிரகங்களின் அருள்வேண்டும். அதில் குரு, சுக்கிரன் முக்கியமானவர்கள். இவர்கள் தந்த பொருளைப் பாதுகாக்க செவ்வாயின் அருள்வேண்டும். விரயங்களைத் தவிர்க்க சனியின் அருள் வேண்டும். புத்திசாலித்தனமாக தனம் திரட்ட புதனை நாடவேண்டிய சூழ்நிலை உண்டாகும். தேடிய தனம் பன்மடங்கு பெருக ராகுவின் அருள்வேண்டும். பெரிய கோடீஸ்வரரின் தனத்தைப் பாதுகாக்க அரசாங்க ஆதரவு வேண்டுமல்லவா? அதற்கு சூரிய- சந்திரர்களின் அருள்வேண்டும். தேடிய தனத்தில் புண்ணியம் தேடிக்கொள்ள கேதுவின் அருளும் வேண்டும். எனவே நவநாயகர்களின் அருளும் இருந்தால்தான் மகா திரவிய யோகம் உண்டாகும்.

குரு- சந்திரன்; குரு- செவ்வாய்; குரு- புதன்; சுக்கிரன்- செவ்வாய்; சுக்கிரன்- புதன்; சூரியன்- சந்திரன்; சூரியன்- குரு; சூரியன்- புதன்; சந்திரன்- செவ்வாய்; சனி- கேது; குரு- ராகு ஆகிய இரட்டை கிரக சம்பந்தமானது வேறு சிறுசிறு கெடுதல்களைச் செய்தாலும் தனவிருத்தியைத் தரக்கூடியவை. உதாரண மாக குரு- ராகு சேர்க்கையானது நாத்திக எண்ணத்தை உருவாக்கினாலும் திரவியத் தைத் தருமென்று நம்பலாம். சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கையால் சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும் என்றாலும் பணம் தரும் யோகம் என்றும் நம்பலாம்.

 

god



தர்மகர்மாதிபதி யோகம் என்பது ஒரு இரட்டை கிரக யோகமல்லவா? இந்த இரட் டையர்களை குரு பார்த்தால் யோகத்தின் அளவு அதிகமாகும். புதாதித்திய யோகம் என்பது சூரியன், புதன் சேர்க்கையாகும். இதை குரு பார்த்தால் வலிமை அதிகமாகும். சந்திரமங்கள யோகம் என்பது செவ்வாயும் சந்திரனும் இணைவதாம். இதை குரு பார்த்தால் வலிமை அதிகரிக்கும். இப்படியாக இரண்டு கிரகங்கள் ஒரு வீட்டில் நிற்க, குரு பார்த்தால் தனப்பெருக் கம் உண்டு. குரு பார்க்கும் மூன்று வீடுகளில் தலா இரண்டு கிரகங்கள் வீதம் நட்பாய் ஆறு வீடுகளில் நின்றால் அது மகா தனப் பெருக்கம் அல்லவா? அதுதான் மகா திரவிய யோகமாகும். ஒரு வீட்டில் நிற்கும் இருவருக்கும் நட்பு இல்லையென்றாலும் பகை இருக்கக்கூடாது.

சனி- கேது, சூரியன்- சந்திரன் ஆகிய இணைவில் 15 பாகைகள் இடைவெளி இருப்பது மிக நன்று. குருவோடு ஒரு நண்பர், குருவின் 5-ஆவது பார்வையில் இரட்டை நண்பர்கள், குருவின் 7-ஆவது பார்வையில் இரண்டு நண்பர்கள், குருவின் 9-ஆவது பார்வையில் இரண்டு நட்பு கிரகங்கள் நிற்கும் நிலை உண்டாகும்போது ஜாதகமே புனிதப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட நிலையில் தொட்டது துலங்கும் நிலையும் உண்டாகுமல்லவா? பிறகென்ன? மகாலட்சுமியானவள் அருள் புரிய யாரைக் கேட்க வேண்டும்! வீடுதேடி வந்துவிடுவாளே! பெரும் தனவான்களாகப் பிரகாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் இந்த கிரக அமைப்புக்கு மகா திரவிய யோகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த யோகத்தில் தனகாரகனான குரு வலிமை பெறுவது மிக அவசியமாகும். மகாலட்சுமிக்குரிய சுக்ராச்சாரியாரும் பலம்பெற்று நிற்பது அவசியம்.

 

god



ஒருவருக்கொருவர் பகை பெற்றவர்கள் இணைவது நல்லதல்ல என்றாலும், குரு பார்வையால் சமாதானமுண்டு என்று நம்பலாம். சனி- செவ்வாய் இணைவை குரு பார்த்தால் தீமையில்லை. இதுபோல இருவர் இணையும்போது தோஷம் தரும் சூழ்நி லையும் உண்டாகும். குரு பார்வையால் தோஷம் விலக வாய்ப்புண்டு. சூரியனும் செவ்வாயும் இணைந்தால் மாங்கல்ய தோஷ மாகும். ஆனால் குரு பார்த்தால் அது ஔஷத (மருத்துவ) யோகமாகும். ஒரு தோஷத்தைக் கூட குரு பார்வையானது யோகமாக மாற்றும் புனிதத்திறன் படைத்தது என்பது முக்கியமான விஷயமாகும்.

எனவே, குரு பார்வை பெற்ற இரட்டை கிரகங்கள் நலமளிப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். சிலருக்கு குரு- கேது இணைந்திருப் பார்கள். அதுவும் தனவிருத்தி யோகம்தான். ஆனால் இந்த அமைப்பில் குருவைவிட்டு கேது 15 பாகைக்குமேல் தள்ளிநிற்க வேண்டும். குருமீது பாவர்களின் பார்வை படுவது அவருக்கு சற்று பலவீனம்தான். எனவே தனவான்களாகப் பிரகாசிக்க தனகாரகனும், தனலட்சுமி அருள் பெற்றவனும் மிகச்சிறப்பாக இருக்க வேண்டும். மேற்கண்ட நிலையில் கிரகங்கள் நிற்கும் போது பணப்புழக்கம் வருவதற்குரிய தசாபுக் திகள் நடப்பில் வரவேண்டும். நவகிரகம் சம்பந்தப்பட்ட யோகம் என்ப தால் சூரியனார்கோவில் சென்று பரிகா ரங்கள் செய்துகொள்ளவும். ஸ்ரீதனாகர்ஷண குபேர ரட்சை அல்லது ஸ்ரீதனலட்சுமி ரட்சை அணிந்துகொள்ளலாம். திரவிய யோகங்களில் ஏதாவது ஒன்று இருந்தால்கூட நீங்கள் தினந்தோறும் பணம் புழங்கும் தனவானே!


- கே.ஜி. ராஜன்.