Skip to main content

இந்தியர்களுக்கு தடை விதிக்கும் உலக நாடுகள்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

indians

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,761 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை தடை செய்துள்ளனர். 

 

இம்மாத தொடக்கத்தில் நியூசிலாந்து நாடு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. தற்போது ஹாங்காங்கும் இந்திய பயணிகள் விமானத்திற்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று (20.04.2021) அமலுக்கு வருகிறது. முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, சமீபத்தில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்ட இந்த தென்னாப்பிரிக்க வைரஸ், தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பதாலும், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இந்தியாவிலிருந்து ஹாங்காங்கிற்கு விமானத்தில் சென்ற பலருக்கு கரோனா உறுதியானதாலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை ரஷ்யா தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. மேலும், இந்தியாவை இங்கிலாந்து தனது ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வசிக்காதவர்களோ, பிரிட்டிஷ் குடிமக்களாக இல்லாதவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்க கூடாது. இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு சென்று, அங்கு 10 நாட்கள் இருந்துவிட்டு இங்கிலாந்து செல்லலாம். 

 

அதேநேரம் இங்கிலாந்து குடிமக்களோ, இங்கிலாந்தில் வசிப்பவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்றால், அவர்கள் 11 இரவுகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த விதிமுறை வரும் 23ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வர இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்