Skip to main content

நிசப்தமானது குரலற்றவர்களின் குரல்! - அஸ்மா ஜகாங்கீர் எனும் அணையா தீபம்!!

Published on 12/02/2018 | Edited on 20/02/2019

மனித உரிமைப் போராளியும், மூத்த வழக்கறிஞருமான அஸ்மா ஜகாங்கீர் நேற்று மாரடைப்பில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பாகிஸ்தான் நாட்டில் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர் மூத்த வழக்கறிஞர் அஸ்மா ஜகாங்கீர். பாகிஸ்தானின் லாகூரில் 1952ஆம் ஆண்டு, ஜனவரி 27ஆம் தேதி பிறந்தவர். அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இளம் வயதில் இருந்தே மனித உரிமைகளின் மீது நாட்டம் கொண்டவராக இருந்தார் அஸ்மா. 

 

பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து சட்டமும் தேர்ந்து வழக்கறிஞராக பணியில் சேர்ந்த அஸ்மா, உலக அளவில் அறியப்பட்ட மனித உரிமை வழக்கறிஞர் ஆவார். மனித உரிமைகள் பறிக்கப்படும் போது யாருக்கும் அஞ்சாமல் குரல்கொடுத்தும், சிறுபாண்மையினரின் நலன் சார்ந்த பிரச்சனைகளை தொடர்ந்து விவாதித்தும் வந்தவர். 

 

பாதிக்கப்பட்டவர்களின் வழக்கு நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் துணிந்து வாதாடி, அதில் பெரும்பாலும் வெற்றிபெற்றுத் தந்த அஸ்மா, பணத்தை எதிர்பார்த்திடாதவர். இதுகுறித்து அஸ்மாவின் உதவியாளராக நான்கு தசாப்தங்கள் பணியாற்றிய சவுத்ரி அக்தர் அலி, ‘அஸ்மா தன் வாழ்நாளில் எதிர்கொண்ட பாதிக்கும் மேலான வழக்குகளில், அவர் எந்தக் கட்டணமும் வசூலித்ததில்லை. அதேசமயம், இதை வெளியில் பெருமையாகவும் சொல்லிக்கொள்ள விரும்பாதவர்’ என புகழாரம் சூட்டுகிறார்.

 

Asma

 

தொடர்ந்து அவர், ‘ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண் அஸ்மாவின் அலுவலகத்திற்கு வந்தார். தனது மகனை தன் கணவர் கடத்திவிட்டதாகவும், அவரிடமிருந்து தன் மகனை மீட்டுத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்த அஸ்மா அதில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த ஜப்பான் பெண்ணிடம் போதுமான பணம் இல்லை. எனவே, தன் சொந்தப் பணம் 14 லட்ச ரூபாயை செலவழித்து ஷ்யூரிட்டி பத்திரத்தை அந்தப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுத்தவர் அஸ்மா’ என நினைவுகூருகிறார்.

 

பாகிஸ்தானில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த ஜியா உல் ஹக் காலத்தில் ராணுவத்தை எதிர்த்ததற்காக 1983ஆம் ஆண்டு சிறைவாசம் சென்றவர் அஸ்மா. தொடர்ந்து ராணுவ நெருக்கடிகளை எதிர்கொண்ட அவர், அரசால் நாடுகடத்தப்பட்டவர்களை மீட்கவும் நீதிமன்றங்களில் வாதிட்டார். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் அஸ்மா.

 

தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வந்த அஸ்மா, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவனர்களுள் ஒருவராவார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான அஸ்மா, நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மகள் முனிஜே ஜகாங்கீர் தெரிவித்திருக்கிறார். 

 

ஒப்பற்ற மனித உரிமைப் போராளியான அஸ்மா ஜகாங்கீரின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன், ‘குரலற்றவர்களின் குரலாக வாழ்ந்த, ஒழுக்கத்துக்கும், தைரியத்துக்கும் பேர்போன அஸ்மா ஜகாங்கீரை இன்று பாகிஸ்தான் இழந்திருக்கிறது’ என வருத்தம் தெரிவித்துள்ளார். குரலற்றவர்களின் குரல் நிசப்தம் அடைந்திருக்கிறது. அணையா தீபமாக மிளிர்கிறார் அஸ்மா.

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.