Skip to main content

ஒமிக்ரான் அறிகுறிகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் தகவல்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

omicron

 

தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை கரோனா, இதுவரை 13 நாடுகளுக்குப் பரவியுள்ளது. மேலும், இந்தக் கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதைத் தடை செய்துள்ளனர். இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஒமிக்ரான் மேலும் பல நாடுகளுக்குப் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், ஒமிக்ரானால் ஏற்படும் உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஒமிக்ரானால், கரோனா பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்றும், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சோர்வு ஏற்படும் என கூறியுள்ளனர். இளம் வயதினரும் இந்த தீவிர சோர்வு ஏற்படுவதாகவும் அந்தநாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொண்டை அரிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க மருத்துவர்கள், இந்த வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறையவில்லை எனவும், சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்