Skip to main content

கைது செய்த காவல்துறையை விமர்சித்து ஊர்வலம் நடத்திய விசிக மா.செ -மீண்டும் சிறையிலடைக்க தீவிரம்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Visika M.S., who criticized the police and held a procession. - Severity of re-imprisonment

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வணிகவளாகம் கட்டினார். அதில் ஒரு கடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மா.செ பகலவன் கட்சி அலுவலகம் வைத்துள்ளார். அந்த வணிக வளாகத்துக்கு பின்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் 3 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளது. அதில் ஒரு கடையை டெண்டர் வழியாக எடுத்து நடத்தி வருகிறார் சின்னக்கண்ணு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னகண்ணுவின் கடையின் சுவற்றை கட்சி அலுவலகத்தின் வழியாக உடைத்து தங்கள் அந்த கடையை ஆக்ரமித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஒ.செ ரமேஷ் அதனை கட்சி அலுவலகத்தோடு இணைத்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியான சின்னகண்ணு ஆரணி நகர காவல்நிலையத்தில் பாஸ்கரன், ரமேஷ் உட்பட சிலர் மீது புகார் தந்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணைக்கு பலமுறை பகலவன் என்கிற பாஸ்கரனை அழைத்தும் வரவில்லையாம். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் விசாரணைக்கு வந்தவர், என்னையே விசாரணைக்கு அழைப்பியா என காவல்நிலையத்தில் இருந்த எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசியவர், அவரின் சாதி பெயரை கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவியது. இதன் பின்னர் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தார், கட்டம் இடித்து ஆக்கிரமிப்பு போன்ற குற்றச்சாட்டின் கீழ் பாஸ்கரன், ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்செல்லும்போதே காவல் டெம்போ ட்ராவலரை முற்றுகையிட்டு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து மீண்டு நீதிபதி முன் நிறுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர்.

 

சிறையிலிருந்த பாஸ்கரனுக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி பிணை கிடைத்தது. வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தவருக்கு மாலை, மரியாதை செய்து காரில் அவரை ஊர்வலமாக பந்தாவாக அழைத்து வந்தனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். ஆரணி நகரத்துக்குள் அனுமதி இல்லாமல் நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டு ஊர்வலம் நடத்தினர். அப்போது மா.செ பாஸ்கரன் போலீசுக்கு எதிராக குரல் எழுப்ப அவரது ஆதரவாளர்கள் பின்பாட்டு குரல் எழுப்பினர். வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்த ஆரணி நகர காவல்நிலையம் முன்பும் ஊர்வலமாக வந்து அச்சறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலம் வந்தனர். இதனை போலிஸாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

 

Visika M.S., who criticized the police and held a procession. - Severity of re-imprisonment

 

காவல்துறையை படுமோசமாக விமர்சிக்கும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரண்டாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறை தலைமை கவனத்துக்கு சென்றுள்ளது. வடக்கு மண்டல காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விசாரித்துள்ளனர்.

 

காவல்துறை அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்தியவர்கள், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக சட்ட ஆலோசனையும் கேட்டுள்ளனர். ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்