தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தொடக்கத்திலிருந்தே மக்களுக்குக் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை அரசு செய்துவருகிறது. சாலைகளில் கரோனா ஓவியங்கள் வரைவது, அவசியம் இன்றி வெளியில் வருவோர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா மாதிரி உருவங்களைச் சாலை ஓரங்களில் வைப்பது, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் திரை பிரபலங்களைக் கொண்டு கரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒளிபரப்புவது என அனைத்து விதமான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகளுடன் திருநங்களைகளும் இணைந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் (09.07.2020) சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் திருநங்கைகள் வீடுவீடாகச் சென்று கரோனா பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தனர்.