வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் கன்னியப்பன் மற்றும் மேகநாதன் பீக்டைம் நேரத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் ரூட் எண் 407 வண்டியின் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் பென்னாதுரையை சேர்ந்த சதீஷ் வண்டியை எடுத்துக்கொண்டு சித்தூர் பேருந்து நிலையம் வழியாக சென்றுள்ளார்.
அப்போது போக்குவரத்து சிக்னலை மீறி சென்றதாக போக்குவரத்து காவல்துறையினர் வண்டியை மடக்கி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது ஓட்டுநருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் ஓட்டுநர் தன்னை காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தாக்கினார் என குற்றச்சாட்டை வைத்து தனது மொபைலில் தொடர்ந்து வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
அதனையடுத்து பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் திடீரென சூழ்ந்ததால் காட்பாடி திருவலம் சாலை வேலூர் சித்தூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.