வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை தடுப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி கடத்தல்காரர்கள் புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் போன்றவற்றை வாகனங்களில் பல்வேறு தருணங்களில் கடத்தி வந்துள்ளனர்.
அப்படி கடத்தி வரப்பட்டு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 6,240 மது பாட்டில்கள், 140 லிட்டர் சாராயம் ஆகியவை விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு மூன்றரை லட்சம் ரூபாய். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தையும் அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து நீதிபதி பூர்ணிமா, முன்னிலையில் காவல்துறையினர் நேற்று ஒரே இடத்தில் கீழே கொட்டி மதுபாட்டில்களை அழித்தனர்.