Skip to main content

துணை ராணுவ வீரர் விஷமருந்தி தற்கொலை! மனைவி, பெற்றோர் அதிர்ச்சி!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

tenkasi CRPF person passes away

 

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (34) துணை ராணுவ வீரரான இவர் தற்போது காஷ்மீரின் பாதுகாப்பு பணியிலிருந்து வருகிறார்.

 

கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கும் பாம்பு கோவில் சந்தையைச் சேர்ந்த முத்து லட்சுமி என்பவருக்கும் திருமணமானது. தற்போது அவருக்கு இரண்டு பெண் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

கடந்த வாரம் நடைபெற்ற தனது தம்பியின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் இசக்கிமுத்து.

 

திருமண நிகழ்ச்சிக்கு பின்பு நேற்று சங்கரன்கோவில் நகரிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இசக்கி முத்து விஷம் குடித்து விட்டு ஊரில் உள்ள தன் மனைவி முத்து லட்சுமிக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்திருக்கிறார். இதனால் பதறிப்போன முத்து லட்சுமி சங்கரன்கோவிலில் உள்ள இசக்கி முத்துவின் பெற்றோருக்கு தெரிவிக்க, பதற்றமான பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் விடுதிக்கு விரைந்து வந்திருக்கிறார்கள். அங்கு மயங்கிக் கிடந்த இசக்கி முத்துவை, உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.


தகவலறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊர் திரும்பிய துணை ராணுவ வீரர் இசக்கி முத்து குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்திருக்கிறாராம். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும் வேறு கோணங்களிலும் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது துணை ராணுவ வீரரின் தற்கொலை விவகாரம்.

 

 

சார்ந்த செய்திகள்