Skip to main content

மாநில எல்லை மூடல்... தமிழக - கேரள போலீசார் வாக்குவாதம்

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கொடூர கரோனாவின் தாக்கம் கூடுதலாகலாம் என்பதால் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக தமிழகத்தின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மூன்று மாநிலங்களின் எல்லைகள் மார்ச் 31 வரை மூடப்பட்டன.
 

பயணிகளின் நலன் பொருட்டு அந்தந்த மாநிலங்களிலிருந்து குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். பால், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள், போன்ற அத்யாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்குத் தடையில்லை. இவைகள் தவிர்த்து இதர போக்குவரத்து வாகனங்கள் சென்று வர தடை என்று அரசு மார்ச் 21 அன்று அறிவித்த மறுகணமே தமிழகத்தின் எல்லைப்புறங்கள் மூடப்பட்டன. காரணம் கொரோனாவின் தாக்கம் கேரளாவில் கூடுதலான ரேஞ்சுக்குப் போனதுதான்.

 

 border



தடைகள் உடனடி நடைமுறைக்கு வந்ததால், குறிப்பாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை செக்போஸ்டில் கேரளாவிலிருந்து வருகிற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. எல்லைப் புறத்திற்கு போலீஸ் படையுடன் வந்த தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், அத்யாவசியப் பொருட்களின் வாகனங்களை மட்டுமே கேரளாவிற்கு அனுப்பி வைத்தவர், கேரளாவிலிருந்து வந்த இதர வாகனங்களைத் திருப்பி அனுப்ப, அந்த வாகனங்கள் கேரளாவின் எல்லையான ஆரியங்காவு கோட்டைவாசல் வந்த போது நெருக்கடியானது. அத்துடன் அந்தப் பகுதியில் கயிறு கட்டித் தடுப்புகளை ஏற்படுத்திய தமிழக போலீசார் கேரளாவிலிருந்து டூவீலரில் வந்தவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கேரள ஆரியங்காவு பகுதி பதற்றத்துடன் பரபரப்பானது. போலீஸ் மைக் மூலம் வந்த தகவலால் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்.
 

கூட்டம் அதிகமாகிப் ப்ளாக் ஆன நிலையில் அங்கு வந்த கேரளாவின் பார்டர் பகுதி ஆரியங்காவு பஞ். தலைவரான பிரதீப், டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணனிடம் போய், பைக்கில் வந்தவர்களை தமிழகத்திற்கள் போக அனுமதியுங்கள் என்று சொல்ல.
 

கடுப்பான டி.எஸ்.பி, கரோனா பிரச்சனை உத்தரவு. நீ யார்ய்யா அவங்கள அனுமதிக்க சொல்றது என்றதும்
 

நான் இங்த ஊர் பஞ். தலைவர். மக்கள் ரெப்ரஷன்டேட்டிவ். நான் சொல்லாம, பின்னே யார் பேசுவா. முதல்ல அவங்கள அனுமதியுங்க என்று பிரதீப் குரலை உயர்ந்த, வாக்குவாதம் மூண்டது. பின்பு அவரை அடக்கிய டி.எஸ்.பி.
 

மறுத்துவிட்டு.. மொதல்ல நீ, எடத்தக் காலிபண்ணிட்டுப் போ.. என்று அவரைப் போலீஸ் உதவியுடன் அப்புறப்படுத்தியிருக்கிறார்.
 

எல்லைப் புறமான கேரளாவின் தென்மலை எஸ்.எஸ்.ஐ மணிகண்டன் போலீஸ் படையுடன் ஸ்பாட்டுக்கு வந்தவர் ஸ்பாட்டிலிருப்பது தமிழகத்தின் டி.எஸ்.பி. எஸ்.ஐ.க்கும் மேலான உயர் அதிகாரி என்று தெரிந்தும், இயல்பாக கீழ் அதிகாரி, உயர் போலீஸ் அதிகாரிக்குத் தரவேண்டிய மரியாதையைத் தராத எஸ்.எஸ்.ஐ. யான மணிகண்டன் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணனுக்கு முறைப்படி சல்யூட் செய்யாமல், வந்த வேகத்தில்.

 

நீங்கள் எப்படி எங்கள் எல்லைக்குள் வரலாம் என்று கத்தியிருக்கிறார். அவரோடு அந்தப் பகுதியினரும் சேர்ந்து கூச்சலிட்டனர்.
 

தொடர்ந்து முன்னேறிய எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன், தமிழக போலீஸ் கட்டியிருந்த தடைக் கயிற்றை அகற்றி டூவீலரில் வந்தவர்களை தமிழகம் செல்ல அனுமதித்த போது பதைபதைப்போடு மறித்த டி.எஸ்.பி. அவர்களுக்குக் கரோனா தொற்று உள்ளதா, சோதனையிட உத்தரவு. அவர்களை அனுமதிக்க மாட்டேன் என்று தடுத்திருக்கிறார்.
 

நீங்கள் அனுமதிக்கலைன்னா, தமிழகத்திலிருந்து. நீங்க அனுப்பிச்ச வண்டிகளைத் திருப்பி அனுப்புவேன். என எஸ்.எஸ்.ஐ. தன் தெனாவெட்டைக் காட்டினார்.
 

அப்படி நீ திருப்புன, ஒங்களுக்குச் சாப்புடுவதற்கு தமிழ்நாட்டிலருந்துதான காய்கறிக வரணும். அத நா நிப்பாட்டிட்டா. நீங்க பட்டினி கெடக்கனும். யோசிச்சுப் பார்யா. என்று டி.எஸ்.பி, எஸ்.எஸ்.ஐ.யை அதட்ட..
 

நிப்பாட்டிப் பாருங்க என்று, பதிலுக்குக் குரலை உயர்த்தி சேலன்ஜ் செய்திருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன்.
 

இருமாநில போலீசார் மற்றும் மக்களின் டென்ஷன் பற்றிய தகவல், அவரவர் மாநில உயரதிகாரிகளுக்குப் பறக்க, பின்னரே அவர்களுக்கானத் தகவல் போலீஸ் மைக்கில் பறந்தது.
 

இறுதியாக கேரள போலீஸ் படையிடம் வார்னிங்காகப் பேசிய டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்.
 

அரசு உத்தரவுப்படிதான் செயல்பட வேண்டும். எந்த விதமான வகைகளை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் மீறினால் அது இரண்டு மாநிலப் பிரச்சனையாகிவிடும் என்று எச்சரித்த பிறகே, கேரள எஸ்.எஸ்.ஐ மணிகண்டனின் போலீஸ் படை பின்வாங்கியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.