திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட எரகுடியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் யூகலிப்டஸ் தைல மரத்தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ, காற்றினால் வனப்பகுதிக்கும் பரவியது. திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த இவ்வனப்பகுதி, சுட்டெரிக்கும் வெயிலால், செடி கொடிகள் மரங்கள், காய்ந்து சருகுகளாக நிரம்பியிருந்தது. நேற்று இப்பகுதிக்கு பரவிய தீ, மளமளவென பரவியது. இத்தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாலை வேளையில் காற்றின் வேகத்தில் தீ இன்னும் மளமளவென பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும், சுமார் 5 ஏக்கர் நிலப்பரவிலுள்ள வனப்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது.