Skip to main content

தந்தையின் சடலத்துடன் 3 நாட்கள் தனியாக தங்கியிருந்த மகன்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
The son stayed alone with his no more father for 3 days in madurai

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (74). ஜோதிடரான இவருக்கு கார்த்திக் சீனிவாசன் (40) என்ற மகனும், ஷர்மிளா (44) என்ற மகளும் உள்ளனர். கார்த்திக் சீனிவாசன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. மகள் ஷர்மிளா திருமணம் ஆகி வில்லாபுரம் பகுதியில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார். ஜெகதீசன் தனது வீட்டின் கீழ் தளத்தில் உள்ள 2 கடைகளை வாடகைக்கு விட்டு இருந்து அதில் வரும் வருமானத்தை வைத்து நாட்களை கடத்தி வந்தார். மேலும், கார்த்திக் சீனிவாசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெகதீசன் தான் அவரை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜெகதீசன் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால் ஷர்மிளா, தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கும் தினமும் வீட்டிற்கு வந்து உணவு அளித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 10ஆம் தேதி தந்தை மற்றும் சகோதரருக்கு உணவு கொடுத்துவிட்டு ஷர்மிளா தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்பு, ஷர்மிளா உணவு கொடுக்க தந்தை வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெகதீசன் வீட்டில் இருந்து கடந்த 3 நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த வீட்டில் இருந்து ஜெகதீசனோ, அவருடைய மகனோ வெளியே வராமல் இருந்ததை கண்டு கீழ் தளத்தில் இருந்த கடைக்காரர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே, கடைக்காரர்கள் உடனே மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு ஜெகதீசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அழுகிய நிலையில் இருந்த ஜெகதீசனின் உடல் அருகே மகன் கார்த்திக் சீனிவாசன் தியானம் செய்துவது போல் இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே, கடைக்காரர்கள் இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் மற்றும் ஷர்மிளாவுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஜெகதீசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஜெகதீசன் இறந்து 3 நாட்கள் ஆகியிருப்பதும், தந்தை இறந்தது தெரியாமல் அவரது உடல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திக் சீனிவாசன் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த உணவுப்பண்டங்களை மட்டும் கார்த்திக் சீனிவாசன் சாப்பிட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடர் இறப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.