Skip to main content

குமரியில் தொடங்கியது சிவராத்திரி சிவாலய ஒட்டம்!

Published on 13/02/2018 | Edited on 13/02/2018
sivalaya-ottam


குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவராத்திரி சிவாலய பக்தர்கள் ஒட்டம் நேற்று மாலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த 12 சிவன் கோவில்கள் விளவங்வோடு மற்றும் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளன. இந்த கோவில்களின் வரலாற்று அடிப்படையை கொண்டு சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிவாலய ஒட்டம் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த கோவில்களை சிவராத்திரி அன்று பக்தர்கள் கால் நடையாய் நடந்து ஒடியே தரிசிக்கின்றனர்.

இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து 6 நாட்கள் விரதமிருந்து நேற்று மாலை சிவாலயத்தின் முதல் கோவிலான திருமலை மகாதேவர் கோவிலிருந்து மங்காடு ஆற்றில் குளித்து விட்டு காவி வேட்டி, காவி துண்டு அணிந்து கொண்டு கோவிந்தா…கோபாலா என்ற கோஷத்தை முழங்கிய படியே ஒட்டத்தை தொடங்கினார்கள்.

தொடர்ந்து இந்த பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீர பத்திரர் கோவில், திருநந்திகரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், பந்நிபாகம் சந்திரமவுலீஸ்வரர் கோவில், கல்குளம் நீலகண்டசுவாமி கோவில், மேலாங்கோடு காலகாலர்     கோவில், திருவிடைக்கோடு சடையப்பநாதர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருபன்றிக்கோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சந்கர நாராயனர் கோவில் ஆகிய 12 கோவில்களுக்கு 110 கி.மீ செல்கின்றனர். இதற்காக இரவு பகல் கண்விழித்து நடக்கின்றனர்.

பின்னர் சிவராத்திரியான இன்று இரவு நட்டாலம் சங்கரா நாராயனர் கோவில் வந்தடைந்து சிவாலய ஒட்டத்தை முடிக்கும் பக்தர்கள் நாளை அதிகாலை 6 மணி வரை தூங்காமல் விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.

இந்த சிவராத்திரி சிவாலய ஒட்டத்தையொட்டி 12 சிவன் கோவில்களிலும் விழா கோலம் பூண்டியிருக்கும். இதில் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானேர் கலந்து கொள்கின்றனர்.

இதையெட்டி இந்த ஆண்டு முதல் இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

- மணிகண்டன்

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாங்க யார்ன்னு தெரியுமா? நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில், தனது ஈஷா யோகா மையத்தில் கூட்டத்தைக் கூட்டி கல்லா கட்டுகிறது சர்ச்சைக்குரிய சாமியார் ஜக்கி வாசுதேவின் கும்பல்.

"பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தைச் சுற்றிவாழும் பழங்குடியின மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் வானளாவிய கட்டடங்களை எழுப்பிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆதாரப்பூர்வ புகார்கள் கொடுத்தாலும் ஆள்வோர் அதைக் கண்டுகொள்வதில்லை. சிவராத்திரி தியானம் என்ற பெயரில் அளவுக்கதிகமான ஒளி, ஒலியை எழுப்பி, வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும் தொடர்கதையாகி இருக்கிறது' என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்

 

jakki



மேலும் பேசிய அவர்கள், "இதைத் தட்டிக் கேட்டுப் போராடும் பழங்குடியின மக்களை மிரட்டுவதற்காகவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடியை சிவராத்திரி நாளில் ஈஷாவுக்குக் கூட்டிவந்து, தனது ஆளுமையை நிறுவினார் ஜக்கி. அதேபோல், இங்கு தன்னைப்போலவே கட்டி வைத்திருக்கும் ஆதியோகி சிலையை வியாபாரமாக்க, சினிமா நடிகைகளை ஆடவைத்தார். அப்படித்தான் ஒருமுறை தமன்னாவும், காஜல் அகர்வாலும் வந்து ஆடிவிட்டுப் போனார்கள்.

 

jakki



ஜக்கியும், நடிகைகளுமாக இப்படி சேர்ந்து போடும் ஆட்டத்தைப் பார்க்க, அலைமோதும் கூட்டத்திற்கு ரகரகமாக கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேடைக்கு நெருக்கமாக இருக்கும் கங்கா கேலரியில் இடம்பெற, தலைக்கு ரூ.50 ஆயிரம் கட்டவேண்டும். அடுத்த வரிசையான யமுனா கேலரிக்கு ரூ.20 ஆயிரமும், நர்மதா கேலரிக்கு ரூ.5 ஆயிரமும், கோதாவரிக்கு ஆயிரம் ரூபாயும் விதிக்கப்பட்டிருந்தது. கடைசி வரிசைக்கு காவிரி எனப் பெயரிட்டு, அதற்கும் ரூ.500 வசூல்செய்தே ஆட்களை அனுமதிக்கிறார்கள். இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்றார்கள்.

 

actress



இந்தமுறை, திரையுலகின் அட்ராக்ட்டிவ் நட்சத்திரத்தை இந்த விழாவிற்கு அழைத்து, அவர் வரமறுத்ததுதான் ஹாட் டாபிக் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆம், இளசுகளின் கனவுக் கன்னியாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருக்கும் நயன்தாரா சிவராத்திரி விழாவிற்கு வந்தாலே கூட்டம் அமோகமாக கூடும். கரன்சிகளை அள்ளலாம் என்று ஜக்கி திட்டம் தீட்டினார்.

 

jakki



இதற்காக நயன்தாரா தரப்பை ஜக்கியின் ஆட்கள் அணுகினார்கள். நயனோ, "என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாது. நான் கேரளா திருவல்லா சிரியன் கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவள் என்றாலும், எந்த மத நிகழ்ச்சியையும் தவிர்த்தது கிடையாது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் "மூக்குத்தி அம்மன்' படத்திற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற எல்லா கோவில்களுக்கும் போயிட்டேன். போய்க்கிட்டும் இருக்கேன். அதனால, வேறெந்த நிகழ்ச்சியிலும் இப்போதைக்கு கலந்துகொள்ள முடியாது' என்று மறுத்திருக்கிறார்.

 

jakki



இதைக்கேட்டு கடுப்பான ஜக்கி தரப்பு.. "நாங்க யார்ன்னு தெரியுமா? நாங்க கூப்பிட்டு வரமாட்டேன்னு சொல்ல எவ்வளவு தைரியம் வேணும்? பார்த்துக்கலாம்'' என்று மிரட்டி இருக்கிறது. அதன் பிறகுதான், அடுத்த சாய்ஸாக "டார்லிங்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நிக்கி கல்ராணியை தேர்வு செய்தார்கள். இவரும் ஜக்கியைப் போலவே கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில்தான் படித்தார். அதனால், கிறிஸ்தவத்தின் மேல் தனக்கிருக்கும் ஈர்ப்பைக் காரணம்காட்டி, அவரும் வர மறுத்திருக்கிறார். அவரை ஐ.டி. ரெய்டைக் காட்டி ஜக்கி தரப்பு மிரட்ட, வேறு வழியில்லாமல் ஈஷாவுக்குள் ஐக்கியமானார் நிக்கி. மத்திய அரசில் தங்களுக்குள்ள செல்வாக்கைக் காட்ட ஐ.டி.ரெய்டு என மிரட்டல் விடுவது சகஜமாகி விட்டது.


ஐ.டி.யைக் காட்டி நிக்கியை ஈஷா தரப்பு வளைத்ததுபோல, ஏன் நயன்தாராவை இழுக்கவில்லை என்று நாம் கேட்டபோது, "தன்னுடைய பவரைப் பயன்படுத்தி நயன்தாராவை ஐ.டி. ரெய்டில் சிக்க வைக்கலாம் என்று முதலில் ஈஷா கணக்குப் போட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் ரஜினியோடு நயன் ஜோடிபோட்ட "தர்பார்' படம் வெளியானதால், அவரை மிரட்டும் வகையில் ஐ.டி.யை இதில் இழுத்துவிட்டால் ரஜினியின் மேலிட செல்வாக்கை எதிர்கொள்ள நேரிடலாம் என நயன் மீதான வேகத்தை கொஞ்சம் பிரேக் போட்டு வைக்கலாம் என்று ஈஷா தரப்பு முடிவு செய்திருக்கிறது'' என்கிறார்கள்.

"துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைக்க, நடிகைகள் காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி ஆட்டம்போட, இந்த ஆண்டு சிவராத்திரியில் ஜக்கி வாசுதேவின் ஆட்டம் வழக்கத்தை விடவும் கூடுதலாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


இதுபற்றி விரிவாக நம்மிடம் பேசிய வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பன்னீர் செல்வம், "இந்த மகா சிவராத்திரி விழா நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானியை வைத்து நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு ஒரு அரசாணையை சத்தமில்லாமல் அனுப்பினார்கள்.

அந்த அரசாணையில், "அரசாங்கத்தின் அனுமதிபெற்ற மலைப்பகுதி இல்லாத இடங்களில், நகர் ஊரமைப்புத் துறையின் கூட்டு உள்ளூர் திட்டக் குழுமத்திற்கும், புறநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர்களுக்கும், மண்டல இணை இயக்குனருக்கும், நகர் ஊரமைப்பு இயக்குனருக்கும் எப்படி கட்டடங்கள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறதோ, அதேபோல மலைப்பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கும் சீக்கிரம் அனுமதி வழங்கப்படும். அப்படி மலையிடத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ள மலையிடப் பாதுகாப்புக் குழுவான HACAவின் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், மலைப்பகுதியில் கட்டடம் கட்ட, மாவட்ட அதிகாரிகள் மூலம் எல்லா அனுமதியையும் பெற்று விடலாம் எனும்போது, ஏற்கனவே அனுமதி இல்லாமல் கட்டடங்களை கட்டியெழுப்பி இருக்கும் ஈஷாவுக்கு இது உற்சாகம் தரும் அறிவிப்புதானே?

இது மட்டுமா? 15 ஆயிரம் சதுர அடிக்கு மேல் போனால் மட்டுமே HACA அனுமதி வாங்கவேண்டும் என்பதைக் கேட்டாலே நெஞ்சு பதறுகிறது. காரணம், அதே அரசாணையில், "அரசின் முழுமைத் திட்டம் உள்ள மலை இடங்களில் கனிம, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், மாவட்ட வன அலுவலர், வனத்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் அனுமதி கேட்டு, ஒரு மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் அனுமதி கொடுத்ததாக எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் அதிமுக்கியமாக, முழுமைத் திட்டம் இல்லாத மலை இடங்களில் நடைமுறைக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று சொன்னவர்கள், நகர்ப்புற பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு ஒரு ஹெக்டேர், ஊரகப்பகுதியில் இரண்டு ஹெக்டேருக்கு அதிகமாகும் பட்சத்தில் HACAவிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதில்தான் ஈஷாவின் வேலைத் திட்டமே அடங்கியிருக்கிறது.

அதாவது, HACAவின் அனுமதியை யானை வழித்தடங்கள் இருக்கும் காட்டுக்குள்தான் பெறவேண்டும். அப்படி இருக்கையில், நகர்ப்புறத்தில் இருக்கும் மனையிடங்களுக்கு HACA அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? ஆக, ஈஷாவுக்காக எல்லா விதிமுறைகளையும் தளர்த்திக் கொடுத்து தங்களது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

முழுக்க முழுக்க மலை வாழ்விடப் பகுதிகளுக்கு எதிரான இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, பழங்குடியின சங்கத் தலைவியான முத்தம்மாள் மூலம் வழக்குத் தொடரப் போகிறோம். மக்களும், வன விலங்குகளும் வெல்வார்கள்'' என்றார் நம்பிக்கையுடன்.

இதற்கிடையில், இந்துத்வ மேடைகளில் அடிக்கடி தலைகாட்டும் அ.தி.மு.க.வின் ஒரே மக்களவை எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஈஷாவின் சிவராத்திரி இரவில் தென்பட்டார். அங்கே ஜக்கியின் கால்களைத் தொட்டுத் தழுவிய ஓ.பி.ஆர்., மோடியிடம் பேசி எனக்கொரு மினிஸ்டர் பதவியை வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இதற்கு ஜக்கியிடம் இருந்து கிரீன் சிக்னல் வர, உற்சாகமாக சிவராத்திரியை அங்கு கழித்திருக்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்.

-மணிகண்டன்
 

 

Next Story

பிரமாண்ட சிவன் சிலை முன்பு சிவாராத்திரி கொண்டாட்டம்...!!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

சிவாராத்திரி திருவிழா ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இரவில் கண் விழித்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

ஒருசில இடங்களில் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர் பக்தர்கள். ஆனால் பல இடங்களில் சிவன் ஆலயங்களில் எந்த கட்டணமும் இன்றி தரிசனம் செய்து வருகிறார்கள்.

 

Shiva statue of Lord Shiva rathri celebrated


பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனமுண்டா? என்று  சிவனுக்கும் – தலைமைப் பவலர் நக்கீரருக்கும் தர்க்கம் நடந்த இடமான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அறியப்படுகிறது. அதனால் தான் நக்கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயம் என்ற பெயர் உள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி எழுப்பிய ஆலயத்திற்கு மீண்டும் 2016 ம் ஆண்டு தான் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

 

Shiva statue of Lord Shiva rathri celebrated


சிவனுக்கும் – நக்கீரருக்கும் தர்க்கம் நடந்து மெய்யின் பக்கம் சிவன் நின்றதால் தான் மெய்நின்ற நாதர் என்ற பெயருடன் ஆலயம் அமைந்துள்ளது. அதனால் கோயில் முன்பு உள்ள தடாகத்தில் சிவனுக்கு 81 அடி உயரத்தில் சிவன் சிலையும், முன்னால் ஏழேகால் அடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் சிவ பக்தர்கள், பொதுமக்கள் லட்சக் கணக்கில் கூடி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

 

Shiva statue of Lord Shiva rathri celebrated


இன்று சிவராத்திரி என்பதால் இன்று மாலை முதலே பக்தர்கள் கூடிவிட்டனர். வரும் பக்தர்களுக்காக கலை நிகழ்ச்சிகளுடன் இரவு முழுவதும் அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுங்குடி கைலாசநாதர் ஆலயத்திலும் பக்தர்கள் கூட்டம் உள்ளது.