Skip to main content

டேங்கர் லாரி பெயர் மாற்ற 5,500 ரூபாய் லஞ்சம்; ஆர்.டி.ஓ, புரோக்கர் கைது

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

bn

 

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கேப்பர் மலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சுதாகர் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் மீது பல்வேறு லஞ்ச புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. எந்த ஒரு பணிக்காகவும் இவர் லஞ்சம் பெறுவதாகவும் இந்த லஞ்சப்பணம் புரோக்கர்கள் மூலம் சென்னையில் ஒரு புரோக்கரிடம் கொடுத்து அதன் பிறகு சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் இல்லத்திற்கு இந்த பணம் செல்வதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் கடலூரை சேர்ந்தவரிடமிருந்து கழிவு நீர் டேங்கர் லாரி வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை புதுப்பிப்பதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை செல்வராஜ் என்பவர் மூலம் அணுகியுள்ளார். செல்வராஜ் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து வட்டார போக்குவரத்து அலுவலரை சந்தித்தபோது அவர் அங்கு வந்த சிவா என்ற புரோக்கரை சந்திக்க கூறியுள்ளார். சிவா என்ற புரோக்கரை சந்தித்தபோது அவர் 5000 ரூபாய் ஆர்.ட்டி.ஓவிற்கு, தனக்கு 500 ரூபாய் என மொத்தம் 5,500 ரூபாய் தர வேண்டுமென கேட்டுள்ளார்.

 

இதனை கொடுக்க மனம் இல்லாத செல்வராஜ் தனது வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் தான் இதற்கான பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதி கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் தெரிவித்தார். தேவநாதனின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 5,500 ரூபாய் பணத்தினை புரோக்கர் சிவாவிடம் இன்று கொடுப்பதற்காக செல்வராஜ் சென்றார். அப்பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் உடன் சென்ற நிலையில் செல்வராஜ் புரோக்கர் சிவாவிடம் அந்த பணம் கொடுத்து, அவர் ஆர்.டி.ஓவிடம் கொடுக்கும் பொழுது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ அறையில் சோதனை மேற்கொண்ட போது 2.5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து சென்னையில் பணம் கைமாற்றம் செய்யும் புரோக்கரையும் அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்த நிலையில் சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் வீடு மற்றும் கடலூரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.