மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், ‘சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 3 வட்டங்களில் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்படும்’ என அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் சென்னையில் குடியிருப்போரின் ரேஷன் அட்டை வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அரசாணையில் இது குறித்து எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தன.
இந்நிலையில் சென்னையில் குடியிருப்போரின் ரேஷன் அட்டை வெளி மாவட்டங்களைச் சேர்ந்ததாக இருக்கும் பட்சத்தில் 6 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து அமைச்சர் உதயநிதி தெரிவிக்கையில், “குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெற விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றம் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சம்பவத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. சம்பவம் குறித்து மத்திய அரசு முறையான விசாரணையை மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.