நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி மர்மநபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க இன்று, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த புலனாய்வு குழுவின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி சகில் அக்தர் கண்காணிக்க வேண்டும். புலனாய்வு குழுவில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னையை சேர்ந்த ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விசாரணை முடியும் வரை ரவிக்கு வேறு பணிகள் ஒதுக்க கூடாது எனவும், அடுத்த கட்ட விசாரணையை, கூடிய விரைவில் சிறப்பு புலனாய்வு குழு தொடர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.