வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று (18.10.2021) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், மேலும் சில இடங்களைச் சேர்ந்து மொத்தம் 50 இடங்களில் சோதனை நடைபெற்றது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியில் சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றது. அதேபோல், கோவையில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் இல்லத்தில் நடைபெற்ற சோதனையும் 15 மணிநேரம் நீடித்த நிலையில் நிறைவடைந்துள்ளது. புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் கல்லூரியில் நள்ளிரவு ஒருமணி வரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.