Skip to main content

பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்ற இளைஞர்கள்..!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விழாக்கள், குடும்ப விழாக்கள் என்று எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அந்த விழாவின் தொடக்கத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்குவதும், விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதையும் சேந்தன்குடி மரம் தங்கசாமி வழக்கமாக கொண்டிருந்தார். அதன் பிறகு அதே முறையை இளைஞர்கள் பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் புயலில் மரங்கள் அழிந்துவிட்டதால் அழிந்த மரங்களை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.

 

puthukottai youth welcomes school students by presenting saplings to them

 

 

இந்த நிலையில் தான் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கீரமங்கலம் கொடிக்கரம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இளைஞர் பெருமன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர். மேலும் படிப்பு உபகரணங்களும் வழங்கினார்கள்.

அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பல மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் சேர்த்தனர். அப்போது புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டவுடன் புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தகத்துடன் மரக்கறுகளும் வழங்கப்பட்டது. 

 

puthukottai youth welcomes school students by presenting saplings to them

 

இது குறித்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்ற இளைஞர்கள் கூறும் போது.. இன்றைய நிலையில் மரங்களில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதானால் தான் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். அதே போல பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மரம் வளர்ப்பு என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதால் பள்ளி திறப்பின் முதல் நாளில் அவர்களை வரவேற்று மரக்கன்றுகளை வழங்கி உள்ளோம். அதே போல புதிய மாணவர்களுக்கும் வழங்கி இருக்கிறோம். இந்த கன்றுகளை இந்த மாணவர்கள் நிச்சயம் வளர்த்துவிடுவார்கள். பின்னாளில் இந்த மரங்களே இவர்களின் உயர்படிப்புக்கு உதவும் என்றனர். 

இதே போல திருவாரூர் மாவட்டத்தில் கிரீன் நீடா என்ற அமைப்பின் சார்பில் பல பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டும், பல பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி திறப்பு நாளை கொண்டாடினார்கள். கிரீன் நீடா அமைப்பால் பல லட்சம் மரக்கன்றகள் இதுவரை நடப்பட்டுள்ளது. அத்தனை கன்றுகளும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டும் வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் திருவாரூர் மாவட்டம் முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம். அதற்கு இளைஞர்களும், மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே போல வணிகர்களும், கிராமத்தினரும் வரவேற்பு கொடுப்பதுடன் நாங்கள் நடும் மரங்களை பாதுகாத்து வளர்க்கிறார்கள். வனத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை இப்படி அத்தனை துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கி மரக்கன்றுகள் வைக்க அனுமதி வழங்கி வருகிறார்கள் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.