Skip to main content

சேறும் சகதியுமான மயான சாலை... நடவடிக்கைக்கு உத்தரவிட்ட ஆட்சியர்!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள ஆலடிக்கொல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கான மயானம் மேக்கா குளத்தின் அருகில் உள்ளது. பல வருடங்களாக அந்த மயானத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 

ஆனால் மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், யார் இறந்தாலும் ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டு சடலத்தை தூக்கிச் சென்று தகனம் செய்து வருகின்றனர். சடத்தை தகனம் செய்ய பயன்படுத்தப்படும் விறகுக் கட்டைகளையும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்று அந்தப் பகுதியில் சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி இறந்த நிலையில், அவரது உடலை மயானத்திற்கு உறவினர்கள் சேற்றில் மிகவும் சிரமப்பட்டு தூக்கிச் சென்றனர். மேலும், மூதாட்டியின் உடலை தகனம் செய்ய விறகுக்கட்டைகள் ஏற்றப்பட்ட சரக்கு ஆட்டோ செல்ல முடியாமல் சகதியில் சிக்கித் திணறியதால், பாதி தூரம் வரை உறவினர்கள் வாகனத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் விறகுக் கட்டைகளை தூக்கி, சுமந்து சென்று தகனம் செய்தனர்.

 

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, ''ஆலடிக்கொல்லை பகுதியில் வசிப்பவர்கள் இறந்தால், மயானத்திற்குக் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லை. சாலை வசதி வேண்டும் என்று கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கோடைக்காலங்களில் சடலங்களைத் தூக்கிச் சென்றுவிடலாம். ஆனால், இப்போது போல மழைக்காலங்களில் சேறும் சகதியுமான நடக்கமுடியாத மண் சாலையில் சடலங்களைத் தூக்கிச் செல்கிறோம். இன்று, விறகு வாகனம் கூட போக முடியாமல் கயிறுகட்டி இழுத்துச் சென்றோம். இதில், வழுக்கி விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை  வழியில் உடைத்துப் போடுவதால், மண்ணோடு புதைந்து கிடந்து காலில் குத்திவிடுகிறது. உடனடியாக மயானச் சாலையை சீரமைக்கவில்லை என்றால் இனிமேல் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்லாமல் சாலையிலேயே வைத்திருப்போம். விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம்'' என்றனர்.

 

சடலத்தை மயானத்திற்குக் கொண்டுசெல்ல சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் தகவல், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்குச் சென்ற நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் முருகேசன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கீரமங்கலம் போலீசாரும் மயானத்திற்குச் செல்ல வழியில்லாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் மயானத்திற்கான சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்