Skip to main content

முதலமைச்சருக்கு வெள்ளி பேனாவை பரிசளித்த கவிஞர் காசி முத்துமாணிக்கம்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Poet Kashi Muthumanikam presented the silver pen to the Chief Minister

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது. 

 

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டுமெனவும் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து அனுமதி அளித்துள்ளது. 

 

இந்நிலையில், திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தனது 64வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து காசி முத்துமாணிக்கம் வாழ்த்து பெற்றார். அப்போது அவர் வெள்ளியாலான பேனாவை முதலமைச்சரிடம் வழங்கினார்.

 

அப்போது, "நீங்கள் கொடுத்த இந்த பரிசினை அறிவாலயத்திலேயே கண்ணில் படும்படியாக வைத்துக்கொள்கிறேன்" என்று ஸ்டாலின் சிரித்தப்படியே கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்