Skip to main content

ஜூன் 21- ஆம் தேதி வரை உணவு பொட்டலங்கள் வழங்க அமைச்சர் உத்தரவு!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

peoples foods tamilnadu minister order

 

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஜூன் 21- ஆம் தேதி வரை உணவு பொட்டலங்களைத் தொடர்ந்து வழங்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினைப் போக்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் கரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12/05/2021 அன்று முதல் 14/06/2021 வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு தமிழக முதல்வர் வழிகாட்டுதல் படி ஆணையிடப்பட்டு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

 

இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது கரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14/06/2021 முதல் 21/06/2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு 21/06/2021 வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதனையும், இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும் நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்