Skip to main content

திறக்கப்பட்டது 'ஜெயலலிதா நினைவு இல்லம்' - முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு! (படங்கள்)

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், இன்று (28.01.2021) திறக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், தற்பொழுது வேதா இல்லத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

 

அதன்பின் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை 10.51 மணிக்கு  துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி இல்லத்தை திறந்துவைத்தார். அதேபோல் வீட்டின் உள்ளே இருந்த குத்து விளக்கை முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஏற்றிவைத்தனர்.

 

 Opened 'Veda Nilayam' - Chief Minister, Deputy Chief Minister, Ministers participate!

 

40 ஆண்டுகள் ஜெயலலிதா இங்கிருந்துதான், நாடாளுமன்ற உறுப்பினர், முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர், அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர், தொடர்ச்சியாக 6 முறை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் அதிமுகவின் அதிகார மையமாகவும் இந்த 'வேதா நிலையம்' செயல்பட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது உலகளவிலான அரசியல் தலைவர்களும் வந்து சென்ற இடமாக ‘வேதா நிலையம்’ இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2017 பிப்ரவரிக்குப் பின்னர், இந்த இல்லம் மூடப்பட்டது. 

 

அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளியில் ‘ஜெயலலிதா நினைவு இல்லம்’ என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி கட்சி தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் உயர்நீதிமன்ற தடையால் வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட முடியாது. ஜெ.தீபா, ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடியும் வரை பொதுமக்கள் வேதா நிலையத்தை பார்வையிட அனுமதியில்லை.

 

இந்த வழக்கில், நிகழ்ச்சி முடிந்த பிறகு சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எந்த பேனர்களும் வைக்கக்கூடாது. அதேபோல் தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்க வேண்டியுள்ளது. எனவே வேதா நிலையத்தில் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்