Skip to main content

 ரேசன் கடைகளின் ஊழியர்கள் சங்கக் கூட்டம்- விஜிலன்ஸ் சோதனை

Published on 03/03/2019 | Edited on 05/03/2019

 

நெல்லையில் நடந்த கூட்டுறவு ரேசன் கடைகளின் ஊழியர்களின் நலச் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் ஒன்றரை லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

 

வ்

 

நெல்லை மாவட்டத்தின் மானூர் வட்டார கூட்டுறவு ரேசன் கடைகளின் அனைத்து ஊழியர்களின் சங்க ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. இந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கூட்டுறவு ரிஜிஸ்தார் சந்தனராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஊழியர்களின் நலன், சங்க வளர்ச்சி பற்றிய ஆலோசனை நடத்தபட்டதாக, தெரிகிறது. இக்கூட்டத்தில் பண வசூல் நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.யான சுப்பையா தலைமையில் போலீஸார் கூட்ட அரங்கிற்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர்.

 

இதனால் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அது சமயம் அங்குள்ள பணம் மற்றும் கணக்குகளைச் சரி பார்த்ததாகத் தெரிகிறது. அந்தச் சரி பார்ப்பு சோதனையில் கணக்கில் வராத சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரிய வர அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். தவிர, கூட்டத்திற்கு வந்த 35 பேரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அவர்களின் அழைப்பு கடிதம் நன்கொடை ரசீதுகள் கணக்குகள், வவுச்சர்கள் உள்ளிட்ட ஆவணைங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

வழக்கமான ஆலோசனைக் கூட்டம் தான் நடந்தது. சங்கத்தின் வரவு செலவுக்குட்பட்ட பணம் அதற்கு முறையான கணக்குகள் உள்ளன என்கிறார்கள் ஊழியர்கள்.  எனினும் விஜிலன்ஸ் நடத்திய இந்தத் திடீர் சோதனை கூட்டுறவு ரேசன் கடைகளின் ஊழியர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்