Skip to main content

நடராஜன் மறைவு - மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
natarajan


உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சசிகலா கணவர் நடராஜன் காலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை எடுத்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே நடராஜனுக்கு கடந்த 16-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
 

natarajan 1

இந்நிலையில் நடராஜன் இன்று அதிகாலை 1 மணி 35 நிமிடங்களுக்கு உயிரிழந்தார். நடராஜனின் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரின் பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
 

natarajan 2


நடராஜனின் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோதே தமிழ்மொழிக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது உணர்வை வெளிப்படுத்தியவர். கலைஞர் மீது அன்பு கொண்டவராகவும், திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக விளங்கியவர். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்க கூடிய அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
 

natarajan 4


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நடராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டியில், ‘நடராஜனின் மறைவு அவரது குடும்பத்திற்கு, திராவிட இயக்கங்களுக்கு பேரிழப்பு. நடராஜனின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்றும் இருக்கும்’ என தெரிவித்தார்.

நடராஜனின் உடலுக்கு நாஞ்சில் சம்பத் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர். நாலாவது தமிழீழ போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகிவிட்டார். அவரை இழந்துத் தவிக்கிற எங்கள் சின்னம்மாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்தார். மேலும், நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.