Skip to main content

'எதிர்பார்த்ததை விட அதிகம்; இதயத்தில் இடம் பிடித்துவிட்டார் டி.ஆர்.பி.ராஜா' - முதல்வர் நெகிழ்ச்சி

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
'More investment than expected; TRP Raja has found a place in the heart'-Multanwar Leshichi

சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ - ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07-01-24) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன். மேலும், இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆனது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இன்று நிறைவு விழா நடைபெற்றது அதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஸ்டார்ட் அப் துறைகளில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்தின் 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகமே வியக்கும் வண்ணம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி இதயத்தில் இடம் பிடித்துவிட்டார் டி.ஆர்.பி.ராஜா. 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். 6,64,180 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப் பெற உள்ளன. எதிர்பார்த்ததை விட அதிக முதலீடு கிடைத்துள்ளது. இந்த புதிய முதலீடுகள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

சார்ந்த செய்திகள்