கரூரில் அரசு பள்ளி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பள்ளி உடைமைகளை சேதப்படுத்தியதோடு, மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்குகளில் கெமிக்கல் கலந்து சென்றதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி அடுத்துள்ளது வீரணம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் சுமார் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், காலை 10:30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த அலங்கார பூச்செடி தொட்டிகளை உடைத்ததோடு பள்ளியின் கழிவறை பூட்டை உடைத்து கழிவறையில் இருந்த பினாயில் உள்ளிட்ட கெமிக்கல்களை மாணவர்கள் நீர் அருந்தும் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மூன்று தண்ணீர் டேங்குகளில் கலந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக சிந்தாமணிபட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் கைரேகை நிபுணர்களும், அதிகாரிகளும் வந்து பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் குடிநீர் தொட்டியில் உள்ள நீரின் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.