Skip to main content

பிரசவத்தில் தாயும் குழந்தையும் மரணம்: நாடகமாடிய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினியரிங் கல்லூரி ஊழியர் விஜினுக்கும் குழித்துறையை சேர்ந்த மெர்லின்திவ்யா (27) இருவருக்கும் கடந்த 11 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மெர்லின்திவ்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனையில் பிரவசத்துக்காக நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.

 

k

   

மெர்லின்திவ்யாவை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு சுகமான பிரவசம் நடக்கும் என்று கூறினார். இதை கேட்டு கணவர் விஜின் மற்றும் உறிவனர்கள் சந்தோஷப்பட்டனர். இந்தநிலையில் பிரசவ வலி ஏற்பட்ட மெர்லின்திவ்யாவை சாதாரண அறையில் இருந்து பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். கொஞ்ச நேரத்தில் பெண் குழந்தை சுகமாக பிறந்தது என்றும் தாயும் நலமாக இருக்கிறார் என மருத்துவமனை ஊழியர்கள் உறவினர்களிடம் வந்து கூறினார்கள். இதை கேட்டு உறவினர்கள் எல்லையில்லா சந்தோஷம் அடைந்தனர். ஆனால் குழந்தையை யாரிடமும் காட்டவில்லை.

 

    இந்த நிலையில் திடீரென்று மெர்லின் திவ்யாவையும் குழந்தையையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆம்புலன்ஸ் பறந்தது. இதை பார்த்த உறவினர்கள் டாக்டரிடம் கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை. இதனால் பதட்டத்துடன் உறவினர்கள் அந்த ஆம்புலன்ஸை பின் தொடர்ந்தனர். அந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு மருத்துவமனைக்குள் சென்றது. 


    அங்கு அவசர, அவசரமாக தாயையும் குழந்தையையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரண்டு உயிர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர் விட்டனர். பின்னர் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்கள் கேட்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லி கொண்டிருந்தனர். 

 

     இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் போலிசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தி இறந்து போன தாயும் சேயும் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர் குழு பரிசோதனை செய்த பிறகு இறந்து போனதற்கான காரணங்கள் தெரிந்த பிறகு நடவடிக்கை எடுக்குப்படும் என கூறியதால் உடல்களை ஆசாரிப்பள்ளம் கொண்டு சென்றனர்.
                        

 

சார்ந்த செய்திகள்