திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆம்பூர் அடுத்த குளிதிகை கிராமத்தின் அருகே பேனர் வைப்பதற்கு இடம் தேர்வு செய்ய சென்றதாக பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. இடங்களை பார்த்துவிட்டு மாதனூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வரும்போது குளிதிகை பகுதியில் உள்ள ராஜஸ்தானி தாபாவில் இரவு உணவருந்த சென்றுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் லோகேஷ்.
கை கழுவிவிட்டு வந்து சாப்பிட அமரும் போது, சத்தமாக 'ஜெய் ஶ்ரீராம்... ஜெய் ஸ்ரீ ராம்...' என கத்திவிட்டு சாப்பிட அமர்ந்ததாகவும் அப்போது அருகில் இருந்த சில இளைஞர்கள், சாப்பிடும் இடத்தில் வந்து எதற்கு 'ஜெய் ஸ்ரீ ராம்' என கூறுகிறார்கள். உங்க மனசுக்குள்ளயே சொல்லிக்கோங்க, இல்லன்னா மெல்லமா சொல்லுங்க. இப்படி கத்தினால் என்ன அர்த்தம் எனக்கேட்டதாக சொல்லப்படுகிறது.
நான் அப்படித்தான் செய்வன் என லோகேஷ் சொன்னதாகவும் இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதமாகியுள்ளது. ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் கை கலப்பாகியுள்ளது. லோகேஷ் மீது அந்த இளைஞர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலறிந்த ஆம்பூர் டி.எஸ். பி சரவணன் தலைமையிலான போலீசார் உண்மையில் நடந்தது என்ன என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பி ஓடிய இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.