Skip to main content

சாவி ஒப்படைப்பு... தீபா வசமானது ஜெ.இல்லம்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Handing over the keys .... Deepa possesses J's house

 

வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது ஜெ.இல்லத்தின் சாவி தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்துவந்தது உயர் நீதிமன்றம்.

 

Handing over the keys .... Deepa possesses J's house

 

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் 24/11/2021 மதியம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார். தீர்ப்பில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமான வரி நிலுவை போக, மீதியைத் தீபா, தீபக்கிடம் கொடுக்கலாம். வரிப் பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம். நீதிமன்றத்தில் செலுத்திய ரூபாய் 67.95 கோடி இழப்பீட்டை அரசுத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தற்பொழுது ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் வேதா நிலையத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்