Skip to main content

“உதயநிதி பேச்சு தூக்கிலிடப்பட வேண்டிய குற்றம்” - ஹெச். ராஜா பேட்டி

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

H. Raja interview

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார். மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு  விளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார்.

 

H. Raja interview

 

இந்நிலையில் பாஜக பிரமுகர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இந்துக்களைப் பற்றி; சனாதன தர்மத்தை தொடர்பவர்களை பற்றி என்ன சொல்கிறார். இது டெங்கு, மலேரியா போல அழிக்க வேண்டுமாம். அதாவது ஒரு ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர் இந்த நாட்டினுடைய 80 சதவீத மக்களை கொலை செய்வேன் என்று அவர் பேசி இருக்கிறார். தூக்கிலிடப்பட வேண்டிய குற்றம் செய்த நபர் கிறிஸ்தவ மதவெறி கொண்ட உதயநிதி ஸ்டாலின்.

 

இவர்கள் சொன்னது வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. இந்துக்களை மலேரியா, டெங்கு மாதிரியே கொலை செய்து விடுவேன் என்று பேசி இருக்கக்கூடிய கொலை நோக்கம் கொண்ட நபரை அரசாங்கம் உடனடியாக கைது செய்ய வேண்டும். இவர்கள் பேசியதை ஹிந்தியில் டிரான்ஸ்லேட் பண்ணி நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தால் இப்போது இருக்கக்கூடிய சீட்டுகள் கூட எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்காது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்