Skip to main content

காதலனைக் கொன்ற தாய் மாமன்; தற்கொலை செய்துகொண்ட காதலி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

girlfriend lost their life in grief over the passed away of her boyfriend

 

கோவை காந்தி நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பிரசாந்த்(21). சுமை தூக்கும் தொழிலாளரான பிரசாந்த் மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா 18 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவர, பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் மகளின் தொடர் வற்புறுத்தலால் அவர்களும் இருவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்கிறோம். சிறிது காலம் கழித்து சேர்த்து வைக்கிறோம் என்று இருவருக்கும் அறிவுரை கூறியுள்ளனர். 

 

இந்த நிலையில் அந்த பெண்ணின் பிறந்தநாளான நேற்று தனது நண்பர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து காதலியின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலியின் பிறந்த நாளை நள்ளிரவில் கேக் வெட்டிக் கொண்டாட முடிவு செய்த பிரசாந்த், முன் தினம் இரவு தனது நண்பர்களுடன் கேக் வாங்கிக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது பிரசாந்த்தும் அவரது நண்பர்களும் மது போதையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இரவு நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டுக் கதவு பூட்டியிருந்ததால் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற பிரசாந்த்தும் அவரது நண்பர்களும் அந்த பெண்ணை வெளியே வரச்சொல்லிக் கூச்சலிட்டுள்ளனர். மேலும் வீட்டின் கதவைத் தட்டி காதலியை வெளியே அழைத்துள்ளனர். அப்போது பெண்ணின் தந்தையும், தாய்மாமன் விக்னேஷும் வெளியே வந்துள்ளனர். அப்போது தனது காதலியை வெளியே வரச்சொல்லி பிரசாந்த் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய்மாமன் விக்னேஷ் வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து பிரசாந்த்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பிரசாந்த்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரசாந்த்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணின் தாய்மாமன் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரசாந்த் உயிரிழந்த நிலையில் அவரது காதலி தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரது காதலன் பிரசாந்த் உயிரிழந்த அடுத்த நாளே விஷமருந்தி அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்த பெண் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலன் இறந்த துக்கத்தில் காதலியும் தனது உயிரை மாய்த்துக்கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்