Skip to main content

தியாகி செயில் வீரன் பென்ஷன் மறுக்கப்பட்ட நிலையில் மறைந்தார்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
Freedom fighter Tiyagi Cuddalore Anjalayammal's son Tiyagi Sail Veeran disappears after being denied pension!

 

 

சுதந்திரப் போராட்ட தியாகி  கடலூர் அஞ்சலையம்மாளின் மகன், தியாகி செயில் வீரன் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, முக்கிய பிரமுகர்களும்  பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எட்டு முறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டவர், தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள். இவர், கடந்த 1931, ஜனவரி 10- ம் தேதி,  கடலூரில் உப்பு எடுக்கும் போரட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆறு மாத கடு்ங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள், நிறை மாதத்தில் பரோலில் வெளியில் வந்து பெற்றடுத்த ஆண் குழந்தைதான் செயில் வீரன். சிறையில் இருந்து வந்தவுடன் பிறந்ததால் இவருக்கு செயில் வீரன் என்று பெயர் சூட்டினார்.

 

அதன்பின்,  பதினைந்து நாள் கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்று, எஞ்சிய இரண்டு மாத தண்டனையை அனுபவித்தார். அதே காலகட்டத்தில்,  1933- ம் ஆண்டில், அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, அஞ்சலை அம்மாளுக்கு  மூன்று மாத தண்டனை விதிக்கப்பட்டபோது,  கைக்குழந்தையாக இருந்த செயில் வீரனுடன்தான் வேலூர் சிறைக்கு சென்றார்.  சிறு பருவத்திலேயே,  விடுதலை போராட்டத்துக்காக தாயுடன் இரு முறை சிறை சென்ற செயில் வீரன்,  பின்னாளில் தியாகிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி செயில் வீரன் எனும் செயவீரனுக்கு, தியாகிகள் உதவித்தொகை தர அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

 

இந்த நிலையில்,  கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் வசித்து வந்த செயில்வீரன் என்கிற செயவீரன் (வயது 91). கடந்த 8-ஆம் தேதி இரவு, புவனகிரி அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர்,  மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்