Skip to main content

வெட்டுக் காயங்களுடன் இளைஞர் மர்ம மரணம்... குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு...!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

ஈரோட்டில் கருங்கல்பாளையம் என்ற பகுதி உள்ளது. அங்கு கே எஸ் நகர் என்ற இடத்தில் காளிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு வயல்வெளியில் இன்று காலை  சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார்  புல்வெளியில் இறந்து கிடந்த இளைஞர் உடலை பரிசோதித்தனர்.

 

Erode incident

 



இறந்து கிடந்தவரின் உடலில் பின் தலையில் அரிவாள் வெட்டும்  கத்திகுத்தும் இருந்தது. அதே போல் பல இடங்களில் வெட்டு காயமும் இருந்துள்ளது. மர்ம கும்பல் ஒன்று கொலையில் ஈடுபட்டிருக்கிறது என்றும், மேலும் அந்த உடல் அருகே கல்களில் ரத்தக் கறையும், அருகே மது பாட்டில்கள் தண்ணீர் பாட்டில்களும் இருந்துள்ளன. அனேகமாக இது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினார்கள் போலீசார்.

கொலையுண்டவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்று விசாரித்து வரும் போலீசார், கொலையுண்ட நபரின் ரத்தம் உறைந்து காணப்பட்டதால் அவர் நேற்று இரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்து அந்த இளைஞர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் முதல் கட்ட விசாரணையில் கொலையுண்ட நபர் ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 22 வயது நாகராஜ் என்றும் இவர் கூலி தொழிலாளி எனவும் தெரியவந்தது.

 



நாகராஜ் தனது நண்பர்களுடன் கருங்கல்பாளையம் வந்து மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள் போலீசார். ஆனால் அவர் யாருடன் வந்தார் போன்ற தகவல்கள் தெரியவில்லை. கருங்கல்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரை பகுதியில் அங்கு ஏராளமான தோட்டங்கள் இருக்கிறது. ஊருக்கு ஒதுக்குப் புறமான இந்த பகுதியில் அடிக்கடி இரவில் இளைஞர்கள் பலர் வந்து மது குடிப்பதும் சத்தம் போட்டு அடிதடியில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

கிரிமினல் கூட்டத்திற்கு உகந்த இந்தப் பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கொடூரமான முறையில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்