Skip to main content

‘கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழப்பு; மருத்துவர்கள் சஸ்பெண்ட்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Doctors suspended'-Minister M. Subramanian

 

 

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, கால் அகற்றப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு ஏற்கனவே பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிரியாவிற்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கவனக்குறைவாக இருந்த மருத்துவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

nn

 

இதுகுறித்து அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மருத்துவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை செய்த இரண்டு மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் வீராங்கனை மரணம் அடைந்துள்ளார். எனவே இருவரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடுகிறேன். பெரியார் நகர் மருத்துவமனையைச் சேர்ந்த அந்த இரு மருத்துவர்கள் மீதும் போலீசில் புகார் அளிப்போம். பிரியாவுக்கு சரியான சிகிச்சையே அளிக்கப்பட்டது. ஆனால், கவனக்குறைவால் தான் இந்தத் துயரம் நடந்துள்ளது. உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்