Skip to main content

சிதம்பரம் அருகே மனைவியின் கண்முன்னே கணவனை இழுத்துச்சென்ற முதலை... உடல் மீட்பு

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வசிக்கும் கலியமூர்த்தி என்பவரது மகன் ஜெயமணி(46) விவசாயி. இவர் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வயலில் வேலை முடிந்து கிராமத்தை ஒட்டியுள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் ஷட்டர் அருகே  உள்ள கரையில் குளித்துக் கொண்டு இருந்துள்ளார்.  இவருக்கு அருகே அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் (60) குணசேகரன்  (18) என்பவரும் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த முதலை ஜெயமணியை கடித்து இழுத்துள்ளது. அப்போது முதலையின் கடியை தாங்கமுடியாமல் அலறிய ஜெயமணியை அருகிலிருந்த ராமலிங்கம் பிடித்து இழுத்துள்ளார். இதனையும் மீறி முதலை இழுத்துச் சென்றதால் அவரை விட்டு விட்டு ராமலிங்கம் கரையேறியுள்ளார். கணவனின் அலரல் சத்தத்தை ஆற்றின் அருகே வயலில் இருந்த அவரது மனைவி அறிந்து  பதறி அடித்துகொண்டு வந்து பார்த்தபோது கணவனை முதலை கடித்து இழுத்து செல்வதை பார்த்து அதே இடத்தில் சத்தம் போட்டவாறு மயங்கி விழுந்தார். பின்னர் அவரை பக்கத்தில் இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து மீட்டனர்.

 

jayamani

 

அதனை தொடர்ந்து தகவல் அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், வனத்துறையினர் ராஜேஷ் உள்ளிட்ட வனக்குழுவினர், முதலை பிடிப்பதில் பயிற்சி பெற்ற நந்திமங்கலம் ராஜி தலைமையிலான குழுவினர், கிராமத்திலுள்ள இளைஞர்களின் உதவியால் ஆற்றில் படகு மூலம் இறங்கி இரவு முழுவதும் ஜெயமணியின் உடலை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டபோது  வியாழக்கிழமை  அதிகாலை 4 மணிக்கு அவரது உடலை ஒரு புதரில் முதலை அடைத்து வைத்துள்ளதை அறிந்து மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி கண்முன்னே கணவனை முதலை கடித்து இழுத்து சென்ற சம்பவம் இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயமணிக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

 

சார்ந்த செய்திகள்