Skip to main content

சுத்துப் போட்ட ரவுடிகள்; தனி ஆளாய் துணிந்த பெண் காவலர்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

chennai marina woman constable kala brave action
 காவலர்  கலா

 

மெரினா கடற்கரைக்கு கடந்த சனிக்கிழமை மாலை காதல் ஜோடி ஒன்று பைக்கில் வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில்  2 பைக்கில் வந்த 4 பேர் இந்த காதல் ஜோடி வந்த பைக் மீது மோதினர். இதனால் நிலைதடுமாறிய காதல் ஜோடி பைக்குடன் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அந்த ரவுடி கும்பல் காதல் ஜோடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றனர். இந்நிலையில் ரவுடி கும்பலின் அநாகரிக செயல் மற்றும் பாலியல் தொல்லையால் அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இவற்றைப் பார்த்து அங்கிருந்த சிலர் ரவுடிகளைத் தட்டி கேட்காமல் அமைதி காத்தனர். இதனை ரவுடிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில் இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கலா என்பவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். இதனை கவனித்த ரவுடிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அந்த பெண் காவலர் தனி நபராக போராடி 4 பேரையும் மடக்கிப் பிடித்தார். பெண் காவலரை ரவுடிகள் 4 பேரும் ஆபாசமாகப் பேசி அவரைத் தாக்க முயன்றனர். இதையடுத்து  கொலை மிரட்டல் விடுத்து விட்டுப் பெண் காவலரின் பிடியில் இருந்து அவர்கள் வந்திருந்த பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

ரவுடிகள்  தப்பிச் சென்ற பைக் பதிவு எண்களுடன் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு பெண் காவலர் கலா தகவல் அளித்தார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய ஆறுதல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் இந்த ரவுடிகள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமிழரசன், உதயகுமார், வசந்தகுமார் மற்றும் சோமசுந்தரம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார்  4 ரவுடிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில்  தனி ஒருவராக  போராடி  இளம் பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பெண் காவலர் கலாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்