Skip to main content

அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் பரிந்துரை! 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
B.S. Raman's nomination as the Chief Public Prosecutor!

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்தப் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது. 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021ம் ஆண்டு அமைந்ததை அடுத்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார். இவர், தனது தந்தையும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான எஸ். ராஜகோபாலிடம் கிரிமினல் சட்டத்தில் பயிற்சி பெற்றார். பிறகு பல முக்கியமான கிரிமினில் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், மாநில அரசு, சி.பி.ஐ., ரயில்வே சார்பாக பல வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி வாதாடினார். தி.மு.க. ஆட்சிக் காலமான 1996 முதல் 2001 வரை தமிழ்நாடு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டிருந்தார். 

தற்போது 2021ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளைக் கையாண்டார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தனது தனிப்பட்ட காரியங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தொடர்ந்து தனித்த முறையில் வழக்கறிஞராகச் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமனை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராகத் தமிழ்நாடு ஆளுநருக்கு அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.