Skip to main content

‘இதுகுறித்து யாரிடமும் கூறக் கூடாது’ - பொள்ளாச்சி மாணவியை மிரட்டியவர் போக்சோவில் கைது!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

boy arrested for threatening school girl

 

கோவை, பொள்ளாச்சி நெகமம் அடுத்த கப்பலங்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். அதே பள்ளியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்துவந்தவர் பொள்ளாச்சி தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவன். இவர்கள் இருவரும் பள்ளி நடைபெற்ற சமயத்தில் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவன் பள்ளி மாணவி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 

அப்போது அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் கூறக் கூடாது என்று அந்த மாணவர் மிரட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

 

இதுகுறித்து மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  உடன் படித்த பள்ளி மாணவன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவன் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்