Skip to main content

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Announcement of relief for drowned journalists-Chief Minister

 

சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் மூழ்கி 5 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை பழவந்தாங்கல் கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அருகில் உள்ள மூவரசம்பேட்டையில் உள்ள குளத்தில் சாமி பல்லாக்கை கரையோரம் வைத்துவிட்டு குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் குளிக்க முற்பட்ட நிலையில் 5 பேர் குளத்தில் மூழ்கினர். ஐந்து பேர் மட்டுமே கரைக்கு வந்தனர். நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்ற நிலையில் தற்போது முதல் கட்டமாக 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

 

பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மீதமுள்ள ஒருவரின் உடலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாமி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் குளத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் சேற்றில் சிக்கி தத்தளித்து நீரில் மூழ்கும் காட்சிகள் வெளியாகி இருந்தது. 

 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு நடத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''மீட்கப்பட்டவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுடைய பொறுப்பு யாரிடம்  இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இது பஞ்சாயத்து குளம் என்று சொல்கிறார்கள். இது கோவில் குளம் கிடையாது. எதை வைத்து கோவில் பக்தர்கள் இங்கே வந்தார்கள் என்பதை சோதனை செய்ய வேண்டும். 18 வயது சிறுவர்களும் அதில் இருந்துள்ளார்கள். இன்னொரு முறை இந்த மாதிரி  உயிரிழப்பு நிகழ்ந்து விடக்கூடாது. விழா தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என தற்போது கூற முடியாது'' என்றார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்