Skip to main content

பெரியாரை சீண்டிய அண்ணாமலை; பதிலடி தந்த ஆர்.எஸ். பாரதி

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Annamalai, which has spoiled Periyar; In response, R.S. Bharti

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு, ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று  நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

 

அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீரங்கம் கோவிலின் வெளியே ஒரு பலகையை வைத்துள்ளார்கள். அதில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று ஒரு கம்பத்தை வைத்து பலகைகளை வைத்துள்ளார்கள். ஆனால், இந்துக்கள் நாம் அறவழி வாழ்க்கை வாழ்கிறோம்.

 

இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக அந்த கம்பமும், பலகையும் அப்புறப்படுத்தப்படும். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும். மேலும், கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சி வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் முன்பும் அகற்றி காட்டுவோம். சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார்.

 

Annamalai, which has spoiled Periyar; In response, R.S. Bharti

 

இந்நிலையில் திமுக அமைப்பு செயாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆர்.எஸ்.பாரதி, “அண்ணாமலை யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். பொய் சொல்வதும், இது போன்ற தேவையற்ற கருத்துகளை தமிழ்நாட்டில் சொல்வதும் தான் தொழிலாக வைத்துள்ளார். கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்ததாலேயே, பாஜவினர் மத்தியில் இருந்து அகற்றப்படுவார்கள். பெரியாரின் கருத்துகளை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்துபோய்விட்டார்கள். பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பேச ஆரம்பித்து விட்டார்கள். சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் வட இந்தியாவில் பெரியாரின் கருத்துகளை பரப்பும் பிரச்சார செயலாளர்களாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூரில் உரையாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, பெரியார் தான் முதன் முதலில் சந்திர மண்டலத்தில் தண்ணீர் இருப்பதை பற்றிய அறிவை ஊட்டியவர் என்று பேசியுள்ளார். எனவே அண்ணாமலையின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்லவில்லை.

 

தந்தை பெரியார் சிலையை எடுத்துவிட்டு திருவள்ளுவர் சிலையை வைப்போம் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் செயல். முதன்முதலில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததே திமுக தான். பெரியாருக்கு சிலை வைத்ததும் திமுக தான். எங்கு எல்லாம் பெரியார் சிலை இருக்கிறதோ அங்கு எல்லாம் வள்ளுவர் சிலை வைப்போம். எங்கு எல்லாம் வள்ளுவர் சிலை இருக்கிறதோ அங்கு எல்லாம் பெரியார் சிலை வைப்போம்” என பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்