Skip to main content

வயதில் இளையவரானாலும் ஸ்டாலின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்... நெல்லை கண்ணன் பேச்சு..!

Published on 05/09/2021 | Edited on 05/09/2021
dddd

 

வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழா இன்று (5-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி.க்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 03ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  என்று நான் அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150-வது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.

 

சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.

 

தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ. சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்.

 

தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவை சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்.

 

செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும்.

 

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வ.உ. சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.

 

வ.உ. சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

 

திருநெல்வேலியில் வ.உ. சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் ரூ1.05 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

 

கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

 

dddd

 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18 -ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும்.

 

இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5, 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசு கட்டிடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.

 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.

 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ. சிதம்பரனார் குறித்த இணைய வழி கருத்தரங்கம் நடைபெறும்.

 

தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

இந்த அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழறிஞர் நெல்லை கண்ணன்.

 

அதில், சென்னை காந்தி மண்டபத்தில் அவர் செக்கு இழுந்த இடத்தில் அவருக்கு மார்பளவு சிலை, கோவையில் சிறையில் இருந்த இடத்தில் முழு உருவச் சிலை, தமிழ்நாட்டில் பல இடங்களில் வ.உ.சி.க்கு மரியாதை, ஒவ்வொரு வருடமும்  'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' என்ற பெயரிலே ஆண்டுதோறும் விருதும், விருது தொகையாக ரூ.5 லட்சம் தமிழனுக்கு தருவது என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

 

குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இன்றுவரை யாரும் அவரை நோக்கி கை நீட்டி குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி நடத்துகிறவர். அந்த மிகப்பெரிய மனிதனுக்கு அந்த செக்கிழுத்த செம்மலுக்கு செம்மாந்த பிள்ளைவாலுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை செய்திருக்கிற மு.க.ஸ்டாலின் வயதில் இளையவர் என்றாலும் நான் அவரது பாதங்களை தொட்டு வணங்குகிறேன். இந்த பெருமையை இந்த நாட்டிற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சொத்து சுகங்களையும் இழந்து வாடிய ஒரு மிகப்பெரிய மனிதனுக்கு தந்திருக்கின்ற இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்