Skip to main content

அக்டோபர் 5 இல் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

A meeting of BJP district leaders on October 5

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.

 

இதனையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் கூறப்பட்டது. இந்த சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.

 

அதே சமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து சென்றதற்கான காரணம் குறித்தும், இதனால் பாஜகவிற்கு ஏற்படும் விளைவு பற்றியும், தமிழ்நாட்டில் அதிமுக இன்றி பாஜக கூட்டணி அமைக்க முடியுமா என்றும், பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றைத் தாக்கல் சமீபத்தில் செய்திருந்தார். அந்த அறிக்கையில் அண்ணாமலைக்கும் - அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது என தகவல் வெளியாகி இருந்தது. இதனையொட்டி நிர்மலா சீதாராமன் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் மற்றும் விளக்கங்களை அண்ணாமலையிடம் இருந்து இந்த சந்திப்பின் போது பெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

 

A meeting of BJP district leaders on October 5

 

இந்நிலையில் அண்ணாமலை தலைமையில் இன்று (03.10.2023) நடைபெறுவதாக இருந்த பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் (05.10.2023)  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டு அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்