Skip to main content

“ஒரே நாடு ஒரே தேர்தலை கலைஞரே ஆதரித்தார்” - நெஞ்சுக்கு நீதியைச் சுட்டிக் காட்டிய அண்ணாமலை!    

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

kalaignar support one country, one election, said Annamalai

 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சிலிருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. அப்பொழுதுதான் ஒரு மாற்றம் வரும். சனாதனத்தை வேரறுக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் சின்னத்தை மாற்ற வேண்டும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை எடுத்துவிடலாமா? எதுவும் தெரியாமல், புரியாமல், படிப்பறிவு இல்லாமல், சொல் புத்தி, சுய புத்தி இல்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டு, நான் பேசியது சரி என்று கூறுபவர் குறித்து நான்  என்ன சொல்வது?

 

சனாதன தர்மம் என்றால் என்னவென்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆண்டாள் கோவிலில் வந்து 30 பாசுரங்களைப் படித்தார். இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம்தான். சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள் தான் என்று 1949 முதல் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது சனாதன தர்மம். 2022-ல், தான் ஒரு கிறிஸ்தவர் எனக் கூறியவருக்கு சனாதன தர்மம் குறித்து பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? உதயநிதி கிறிஸ்தவ சமயத்தையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தால், முதல் கண்டனக் குரலாக எனது குரல்தான் ஒலித்திருக்கும். சனாதன தர்மம் அப்படித்தான் இருக்கும். குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, பழங்குடி இனத்தைச் சேர்ந்த  திருமதி  முர்முவிற்கு  ஓட்டு போடாமல், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிராமணருக்கு ஓட்டு போட்ட இவர்கள் எப்படி சனாதனம் குறித்துப் பேச முடியும்? ஒரே நாடு ஒரே தேர்தலை 1971ல் கலைஞர் ஆதரித்தார். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக  எழுதியிருப்பார். அப்பா புத்தகத்தையே ஸ்டாலின் படிப்பதில்லை.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக நடந்தே தீரும். உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன். 2024 மற்றும்  2026 தேர்தல்களை,  சனாதன  தர்ம தேர்தலாக வைத்துக் கொள்ளலாமா? திமுக சனாதனத்தை ஒழிப்போம் என்று தேர்தலில் பிரச்சாரம் செய்யட்டும், பாஜக சனாதனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும். மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்று பார்த்துவிடலாம். தேர்தல் வந்தாலே அப்பாவும் மகனும் வேல் தூக்குவார்கள். அமைச்சர் சேகர்பாபு சனாதனத்தை வாழைப்பழத் தோலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். முட்டாள்களை எல்லாம் அமைச்சர்களாக வைத்திருந்தால் என்ன செய்வது?” என்று கடுமையாக விமர்சித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்