Skip to main content

வீட்டில் முடங்கிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள்... களத்தில் இறங்கிய திமுகவினர்... ஸ்டாலின் போட்ட உத்தரவு!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

தன்னார்வலர்களோ, அரசியல்கட்சியை சேர்ந்தவர்களோ மக்களுக்கு உதவி செய்யக்கூடாது. எதுவாக இருந்தாலும் தமிழக அரசின் மூலம்தான் நடைபெற வேண்டும். நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என அறிவிக்கப்பட்டதற்கு காரணம், அரசியல்தான்.


  dmk



திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார். அத்தியாவசியப் பொருட்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் கவனிக்கிறார். எனினும், ஆளுங்கட்சியின் அமைச்சரிடம் மக்கள் எதிர்பார்க்கும் வேகம் அவரிடம் இல்லை.

நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழியோ, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமாவதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள மகள் வீட்டிலேயே டெண்ட் அடித்துவிட்டார். வேடசந்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவமும்கூட, மாவட்டம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் அவ்வப்போது கலந்து கொண்டுவிட்டு, திண்டுக்கல் வீட்டில் முடங்கி விடுகிறார் என்கிறார்கள் கட்சிக்காரர்களே. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதுபோல் விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு என்ற நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள்.

nakkheeran app


ஆத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது இரண்டு யூனியனில் உள்ள 46 பஞ்சாயத்துத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை அழைத்து கிருமிநாசினி, முக கவசம், சோப்பு, கையுறை போன்ற கரோனா தடுப்பு உபகரணங்களை, தனது சொந்தப் பணம் 30 லட்சத்திற்கு வாங்கி அந்தந்த பகுதிகளுக்கு சென்று வழங்கிவருகிறார். திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வினரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகளையும், பொறுப்பிலுள்ள உ.பி.களையும் களத்தில் இறங்கி வேலை செய்யும்படி செய்திருக்கிறார். அவரும் தனது தொகுதியில் வலம் வருகிறார்.

அதுபோல் ஒட்டன்சத்திரம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற திமுகவின் கொறடாவுமான சக்கரபாணி தனது தொகுதியில் உள்ள 20 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விசிட் அடித்து தேவையான கரோனா ஒழிப்பு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமின்றி, ஒட்டன்சத்திரத்தில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சில வார்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்று எஸ்.பி.யை சந்தித்து வலியுறுத்தியதுடன் மட்டுமல்லாமல் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளார்..

 

dmk



பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் கொடைக்கானல், பழனி நகராட்சி அதிகாரிகளையும் வட்டாட்சியர்களையும் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை உசுப்பிவிட்டு வருகிறார். தொகுதி மக்களுக்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை பஞ்சாயத்துத் தலைவர்களிடம் கொடுத்து வழங்க சொல்லியிருக்கிறார்.

நத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆண்டி அம்பலமும் தனது தொகுதியில் உள்ள நத்தம், சாணார்பட்டி யூனியனில் வாழும் மக்களுக்காக, ரூபாய் 10 லட்சம் செலவில் கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். கட்சி சார்பில்லாமல், அனைவருக்கும் இந்த உபகரணங்களை விநியோகிக்கும் அதேசமயம், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவோரை கணக்கெடுக்கும்படியும் கூறியிருக்கிறார்.

ஊரடங்கு அறிவித்ததில் இருந்து, ஆளுங்கட்சியைவிட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்தான் வீட்டை விட்டு வெளியே வந்து கரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்கிறார்கள் மக்கள்.


 

சார்ந்த செய்திகள்