Skip to main content

நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும். எப்படி எதிர்த்து செயல்பட முடியும்: திவாகரன் மகன் ஜெயானந்த்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
divakaran son jai anand


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து அம்மா அணி என்ற புதிய கட்சியை திவாகரன் தொடங்கியுள்ளார். அதற்கான செய்தித் தொடர்பாளர்களை நியமித்தார். மேலும் சென்னையில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப்படும் என்றும் கூறினார். 
 

இந்தநிலையில் சென்னை ஈக்காடுதாங்கல் இல்லத்தில் திவாகரனின் மகன் ஜெயானந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

 

ttv dinakaran sasikala


 

தினகரன் கட்சி தொடங்கியது குறித்து சசிகலாவுக்கு நாங்கள் சொல்லவில்லை. கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது. மீண்டும் நாங்கள் டி.டி.வி. தினகரனுடன் இணைய மாட்டோம். அதற்கான எல்லை தாண்டி விட்டது. மீண்டும் இணைவோம் என்று கூறுவதை எல்லாம் நம்ப முடியாது. 
 

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொடர்பு கொள்ளும் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி ஏன் இப்படிப்பட்ட ஒரு முடிவு? என்ன காரணம்? என்று கேட்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் விளக்குகிறோம். இப்போது தான் குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகி உள்ளது. அம்மா அணியில் உண்மையாக இருந்தவர்கள் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மை சற்று காலதாமதமாகத் தான் தெரிய வரும். விரைவில் பலர் வருவார்கள்.

 

divakaran - ops


 

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பல குறைகள் இருக்கின்றன. ஒரு குறைபாடு உள்ள ஆட்சி தான். அதை மறுக்க இயலாது. அ.தி.மு.க.வில் இருக்கும் பலர் எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். சிறையில் இருப்பவர் (சசிகலா) தற்போது தற்சமயம் யாருக்கும் ஆதரவு கொடுக்க முடியாது. சிறையில் இருப்பவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் தெரியும்.
 

சசிகலா சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கூப்பிட்டு எடப்பாடியை நீங்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும். நாங்கள் எப்படி எதிர்த்து செயல்பட முடியும். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.