Skip to main content

“எனக்கு நானே வருத்தப்பட்டுக்கொண்ட 4ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று..” ஆஸ்பயர் சுவாமிநாதன் ட்விட்! 

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Aspire Swaminathan tweet about Edappadi Palanisamy

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று மறைந்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 5 பிப்ரவரி 2017 அன்று, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதல்வர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ். விலகுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், ஆளுநர் அடுத்த ஏற்பாடுகள் முடியும்வரை ஓ.பி.எஸ். முதலமைச்சராக தொடர்வார் என அறிவித்தார். ஆனால், பிப். 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். “என்னை கட்டாயப்படுத்தியதால் பதவியிலிருந்து விலக கடிதம் கொடுத்தேன்” என்றார். இது சசிகலாவிற்கு டென்ஷன் ஏத்த, சசிகலா, அவரை பொறுப்புகளிலிருந்து முதலில் நீக்கினார். அதனைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அதன்பின் தர்மயுத்தம், கோரிக்கை, சமாதான பேச்சு வார்த்தை, கோரிக்கைகளுக்கு உடன்பாடு என பல கட்டங்களை கடந்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. 

 

அப்படி இணைந்தும் அவர்களுக்குள் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என அவர்களின் அரசியல் செயல்பாடுகளில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அதன்படி நேற்று (24.11.2021) நடந்த அதிமுக மா.செ. கூட்டத்திலும், அதிமுகவின் வழிகாட்டு குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11இல் இருந்து 18ஆக உயர்த்த வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பு வலியுறுத்தியது. 

 

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் ஐ.டி.விங்கை கொண்டுவந்தவரும், அதிமுகவிற்கு தனி ஐ.டி.விங்கை உருவாக்கியவருமான, ஆஸ்பயர் சுவாமிநாதன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். இது மீண்டும் அதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக இரண்டாகப் பிரிந்து மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் மற்றும் எம்.ஜி.ஆரின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பெயர் விடுபட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என பரவலாக ஒரு பேச்சு இருந்தது. 

 

 

இந்நிலையில் இப்போது ஆஸ்பயர் சுவாமிநாதன், தனது ட்விட்டர் பக்கத்தில், “இரட்டை இலை மீட்பு, மாபெரும் கொண்டாட்டமாம்.. மும்பெரும் விழாவாம்.. கட்சி கொடி ஏற்றுவார்களாம்... மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு..  “யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை, தலைவர்கள் உட்பட...” மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல..” என்று குறிப்பிட்டிருந்ததையும், அன்றை அழைப்பிதழையும் இன்றைய பதிவில் இணைத்துள்ளார். மேலும், அதில் அவர், ‘ஒரு முதலமைச்சரே என்னை தரம் கெட்டு திட்டி பேசும் அளவிற்கு இருந்ததுபோல என் ட்விட். ஒரு வெள்ளந்தி விவசாயியை  இப்படி கேவலமாக பேசவைத்து விட்டோமே என்று, எனக்கு நானே வருத்தப்பட்டுக்கொண்ட 4ஆம் ஆண்டின் நினைவு நாள் இன்று..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்